புக்கிட் பாஞ்சாங் பொங்கல் கொண்டாட்டம்: மாவிலையில் வரைந்து சாதனை

3 mins read
a2e1f755-5855-4491-97a7-e6fa2672fbfb
மாவிலைத் தோரணங்களைக் காணும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்வர்ட் சியா, லியாங் எங் ஹுவா. இவர்களுடன் புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி (இடக்கோடி), செயற்குழு உறுப்பினர்கள் திவ்யா, கங்கா பாஸ்கரன் (வலக்கோடி). - படம்: ரவி சிங்காரம்
multi-img1 of 3

புக்கிட் பாஞ்சாங் பொங்கல் கொண்டாட்டங்கள், சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் புதிய சாதனையுடன் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) தித்திப்பாக நடந்தேறின.

சிறப்பு விருந்தினர்களான வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், ஹாலந்து - புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா, புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா உட்பட 2,700 பேர் முன்னிலையில் சாதனை படைக்கப்பட்டது.

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்துக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்ட புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா. அவருடன் மக்கள் கழக உறுப்பினர்கள், புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி PBM.
சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்துக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்ட புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா. அவருடன் மக்கள் கழக உறுப்பினர்கள், புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி PBM. - படம்: ரவி சிங்காரம்

“540க்கும் மேற்பட்டோர் சேர்ந்து மாவிலையில் வரைந்ததற்காகச் சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளோம். சீன, மலாய் மொழிகளிலும் சிலர் பொங்கல் வாழ்த்துகளை எழுதினர். நம் வீட்டில் எப்படி மாவிலைத் தோரணம் கட்டித் தொங்க விடுகிறோமோ அதுபோல் இங்கும் தோரணங்களைக் கட்டித் தொங்கவிட்டுள்ளோம்,” என்றார் புக்கிட் பாஞ்சாங் பழைய, புதிய குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு (ஐஎன்சி) செயற்குழு உறுப்பினர் திவ்யா.

540க்கும் மேற்பட்டோர் வரைந்து நான்கு வரிசைகளாகத் கட்டப்பட்ட மாவிலைத் தோரணங்கள். படத்தில் ஐஎன்சி செயற்குழு உறுப்பினர் திவ்யா.
540க்கும் மேற்பட்டோர் வரைந்து நான்கு வரிசைகளாகத் கட்டப்பட்ட மாவிலைத் தோரணங்கள். படத்தில் ஐஎன்சி செயற்குழு உறுப்பினர் திவ்யா. - படம்: ரவி சிங்காரம்
சீன, மலாய் மொழிகளிலும் சிலர் பொங்கல் வாழ்த்துகளை எழுதியிருந்தனர்.
சீன, மலாய் மொழிகளிலும் சிலர் பொங்கல் வாழ்த்துகளை எழுதியிருந்தனர். - படம்: ரவி சிங்காரம்

இதைச் சேர்த்து இதுவே பொங்கல் கொண்டாட்டத்தில் தமது குழு படைத்த 16வது சிங்கப்பூர் புத்தகச் சாதனை என்றார் புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி PBM.

புக்கிட் பாஞ்சாங் குடிமக்கள் ஆலோசனைக் குழுவுடன் புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி இக்கொண்டாட்டங்களை ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வருகிறது. அதனுடன் இணைந்து ரத்த தானமும் நடைபெற்று வருகிறது.

“சிங்கப்பூரில் தீபாவளி நிகழ்ச்சிகளே பிரபலமாகக் கொண்டாடப்பட்டுவந்த வேளையில் 2008ல் ஏன் நாம் தமிழர் திருநாளான பொங்கலைக் கொண்டாடக் கூடாது என்ற எண்ணம் எங்களுக்குத் தோன்றியது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு புதிய சாதனையைப் படைக்க விரும்புகிறோம்,” என்றார் திரு மூர்த்தி.

இதற்கு முன்பு, பொங்கல் பானைகளால் செய்யப்பட்ட ஆக நீண்ட சீன நடனக் கடல்நாகம், ஆகப் பெரிய பொங்கல் பானை, ஆகப் பெரிய முளைப்பாரித் தொட்டி ஊர்வலம், ஆகப் பெரிய அளவில் உரல், உலக்கையில் நெல் குத்துதல், ஆக அதிகமானோர் ஒன்றாகப் பொங்கல் வைத்தல் போன்ற சாதனைகளை அவரது குழு படைத்துள்ளது.

எஸ்ஜி60 என்ற சொல்லுடன் மக்களைக் கவரும் சிக்குகோலத்தை வரைந்திருந்தனர் ஐஎன்சி செயற்குழுவினர்.

ஓவ்வோர் ஆண்டும் ரங்கோலி கோலம் போடும் வழக்கத்துக்கு மாறாக இம்முறைச் சிக்குகோலம் போட முடிவெடுத்தனர் இந்திரா பன்னீர்செல்வம் குழுவினர்.

“சிக்குகோலம் மிகவும் கடினம்; வண்ணத்துடன் இடுவது இன்னும் கடினம். ஏழு மணி நேரம் சேர்ந்து வரைந்துள்ளோம். 60 ஆண்டுகளுக்காக, எங்கிருந்து பார்த்தாலும் 60 புள்ளிகள் வரும் வகையில் வரைந்துள்ளோம்,” என்றார் ஐஎன்சி செயற்குழு உறுப்பினர் கங்கா பாஸ்கரன்.

புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி செயற்குழு உறுப்பினர்கள் வரைந்த சிக்குகோலத்துடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்வர்ட் சியா, லியாங் எங் ஹுவா.
புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி செயற்குழு உறுப்பினர்கள் வரைந்த சிக்குகோலத்துடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்வர்ட் சியா, லியாங் எங் ஹுவா. - படம்: ரவி சிங்காரம்

மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடிய ‘மணிமாறன் கிரியே‌‌ஷன்ஸ்’, முளைப்பாரிகள் ஏந்திய சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகியோர் விருந்தினர்களுக்கு ஆரவார வரவேற்பளித்தனர்.

“இக்கொண்டாட்டம் ஆண்டுக்கு ஆண்டு விரிவடைந்துள்ளது. இந்தியர்கள் மட்டுமன்றி, பல்லினச் சமூகமும் ஒன்றுகூடும் நிகழ்ச்சியாக, புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தின் இன நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கிறது. நிலையற்ற சூழலின் மத்தியில் நமக்கு இருக்கும் நட்புகள், சமூகம், நாட்டுக்காக நாம் நன்றியுடன் இருப்போம்,” என்றார் டாக்டர் விவியன்.

“நம் குடியிருப்பாளர்கள் திருவிழா போன்ற உணர்வுடன் ஒன்றுகூடி தமிழர் பண்பாட்டைப் பாராட்டும் வாய்ப்பாக இக்கொண்டாட்டம் அமைகிறது,” என்றார் திரு லியாங். “நிலையற்ற சூழலிலும் எதிர்பாராவிதமாக சென்ற ஆண்டு நமக்கு நல்ல ஆண்டாக அமைந்தது. நமக்குப் பல வரப்பிரசாதங்கள் கிடைத்தன. அவற்றுக்கு நன்றிகூறுவோம். ஒற்றுமையுடன் இருப்போம்,” என்றார் திரு சியா.

“பரமபதம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளைக் காட்சிப்படுத்துகிறோம். சேர்ந்து பொங்கல் கொண்டாடுவதால் எங்களுக்குப் பிணைப்பு உருவாகிறது. தமிழும் வளர்கிறது. பாரம்பரியமும் தெரிகிறது,” என்றனர் சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஸ்ரீராம் கோபிதா, கண்ணன் ஹிந்துஜா.

நெல்லைப் புடைத்தல், உரல், உலக்கையில் நெல் குத்துதல், பொங்கல் பானையில் இனிப்புப் பொருள்கள் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர். 
நெல்லைப் புடைத்தல், உரல், உலக்கையில் நெல் குத்துதல், பொங்கல் பானையில் இனிப்புப் பொருள்கள் சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்றனர்.  - படம்: ரவி சிங்காரம்

நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லத்திலிருந்து கிட்டத்தட்ட 40 முதியோர் வந்து சிறப்பு சேர்த்தனர்.

இந்திய நடனங்கள் மட்டுமன்றி சீனர்கள் வழங்கிய சீன, நவீன நடனங்களும் இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றின.

கோலாட்டம் கற்பித்த ‘மணிமாறன் கிரியே‌‌ஷன்ஸ்’ நடனக்குழு
கோலாட்டம் கற்பித்த ‘மணிமாறன் கிரியே‌‌ஷன்ஸ்’ நடனக்குழு - படம்: ரவி சிங்காரம்
சீன நடனமணிகளும் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சீன நடனமணிகளும் பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். - படம்: ரவி சிங்காரம்
சிறார்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு எட்வர்ட் சியா, திரு லியாங் எங் ஹுவா, புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி PBM.
சிறார்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு எட்வர்ட் சியா, திரு லியாங் எங் ஹுவா, புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி PBM. - படம்: ரவி சிங்காரம்
இந்திய நடனமணிகள்.
இந்திய நடனமணிகள். - படம்: ரவி சிங்காரம்
பொங்கல் பானை உருவில் கேக்.
பொங்கல் பானை உருவில் கேக். - படம்: ரவி சிங்காரம்
மாட்டுக்குப் புல் ஊட்டும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு எட்வர்ட் சியா, திரு லியாங் எங் ஹுவா. புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி PBM உடன் உள்ளார்.
மாட்டுக்குப் புல் ஊட்டும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு எட்வர்ட் சியா, திரு லியாங் எங் ஹுவா. புக்கிட் பாஞ்சாங் ஐஎன்சி தலைவர் பெருமாள் மூர்த்தி PBM உடன் உள்ளார். - படம்: ரவி சிங்காரம்
துடிப்பான கானங்கள் வழங்கினார் புதுக்கோட்டையைச் சார்ந்த விநாயகம்.
துடிப்பான கானங்கள் வழங்கினார் புதுக்கோட்டையைச் சார்ந்த விநாயகம். - படம்: ரவி சிங்காரம்
சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியருடன்.
சுவா சூ காங் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியருடன். - படம்: ரவி சிங்காரம்
சிறப்பு விருந்தினர்களுடன் சுவா சூ காங் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்.
சிறப்பு விருந்தினர்களுடன் சுவா சூ காங் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள். - படம்: ரவி சிங்காரம்
குறிப்புச் சொற்கள்