தமிழ்மொழிக்குச் சிறந்த முறையில் சேவை ஆற்றியதற்காக மூன்று சிங்கப்பூரர்களுக்கு ‘கலைவளர் செம்மல்’ என்ற விருது தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ளது.
உலகப் புத்தக தினத்தை ஒட்டி இம்மாதம் 26ஆம் தேதியன்று தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் நடத்தப்பட்ட பட்டிமன்ற விழா ஒன்றில் திருவாட்டி ஆர் திலகராணி, திரு தமிழவேல், திருவாட்டி கே. கலையரசி ஆகியோர் அந்த விருதைப் பெற்றனர்.
தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்தப் புதிய விருது, பட்டிமன்ற விழாவின்போது மொத்தம் ஒன்பது பேருக்கு வழங்கப்பட்டது.
நெல்லை அரசு அருங்காட்சியகம், அருணா இதயநல மருத்துவமனை, வ.உ.சி இலக்கிய மாமன்றம், சிங்கப்பூர் வளமான, திவ்யமான குடும்பம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்த அவ்விழா, வண்ணார்பேட்டை அருணா இதயநலக் கலையரங்கில் நடந்தேறியது.
அருணா இதயநல மருத்துவமனையின் நிர்வாகி டாக்டர் அருணாச்சலம் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
‘நிறைவான வாழ்க்கை பெரிதும் கிடைப்பது கிராமத்திலா? நகரத்திலா?’ என்பது பட்டிமன்றத்தின் கருப்பொருள்.
‘கிராமத்தில்’ என்ற அணிக்காக திரு தமிழவேல், திருவாட்டி திலகராணி, பெங்களூர் எஸ் ராஜேஸ்வரி, மதுரை எஸ். விஜயராஜன் ஆகியோரும் ‘நகரத்தில்’ என்ற குழுவுக்காக திருவாட்டி கலையரசியுடன் சென்னை குந்தவி, மதுரை எஸ். விஜயராஜன் ஆகியோரும் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சிக்காக தமிழக பங்கேற்பாளர்களுடன் செயல்பட்ட அனுபவம் இனிமையாகயும் பயனுள்ளதாகவும் இருந்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த பங்கேற்பா ளர்கள் தமிழ் முரசிடம் கூறினர்.
சிங்கப்பூரர்கள் மூவருமே விஎஸ்டிகே எனும் வளமான, சிறப்பான, திவ்யமான குடும்பம் என்ற தமிழ் ஆர்வல அமைப்பைச் சார்ந்தவர்கள்.
“தாய் வீட்டுக்கு நிகரான நல்ல வரவேற்பையும் உபசரிப்பையும் பெற்றோம். டாக்டரும் அவர்தம் துணைவியாரும் வ.உ.சி இலக்கிய மாமன்றத் தலைவர் களும் எங்களை நன்றாகக் கவனித்து, விருதும் வழங்கினர்,” என்றார் திருவாட்டி திலகராணி.
இவரைப் போலவே தமது அனுபவமும் சுவையாக இருந்ததாக மற்றொரு சிங்கப்பூர் பங்கேற்பாளரான திருவாட்டி கலையரசி கூறினார்.
மூத்த தொலைக்காட்சி கலைஞரான திருவாட்டி கலையரசிக்குப் பட்டிமன்றச் சூழலில் உரையாற்றுவது இது மூன்றாவது முறை.
“எனவே, தொடக்கத்தில் தயக்கமாக இருந்தது. ஆனால் சக பங்கேற்பாளர்களும் நடுவரும் எனக்கு ஊக்கம் கொடுத்து உரையாற்றுவதற்கான உத்திகளையும் சொல்லித் தந்தார்கள்,” என்றார்.
இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கு சிங்கப்பூரர்கள் பெரும்பங்கு அளித்ததாக ‘நெல்லை கவிஞர்’ கோ.கணபதி சுப்பிரமணியன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
இதுபோன்ற சொல்வேந்தர் கருத்தரங்கங்கள், பட்டிமன்றங்கள் ஆகியவற்றில் சிங்கப்பூர் இளையர்களும் கலந்துகொண்டும் ஏற்பாடுகள் செய்தும் தமிழை வளர்க்கவேண்டும் என ஆசைப்படுவதாக திருவாட்டி திலகராணி கூறினார்.
காணொளி இணைப்பு - https://youtu.be/PdODko55Ddw