சிங்கப்பூரின் மூத்த தலைமுறைக் கவிஞர் ஜமீலா காலமானார்

சிங்கப்பூரின் மூத்த தலைமுறைக் கவிஞர் ஜமீலா காலமானார்

3 mins read
தமிழ் இலக்கியத்திற்குக் கவிஞர் ஜமீலாவின் பங்களிப்பு
46b8d072-c84b-4b76-a3e0-f78368213545
மறைந்த கவிஞர் ஜமீலா. - படம்: குடும்பத்தினர்

சிங்கப்பூரின் மூத்த தலைமுறைக் கவிஞர் N.M. சம்சுதீன் காலமானார். அவருக்கு வயது 86.

‘கடையநல்லுர் ஜமீலா’ என்று அழைக்கப்படும் அவர் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற இலக்கியப் படைப்புகளை இயற்றிச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்துத் துறைக்கு மிகச் சிறந்த பணியாற்றியதால் கவிஞர் ஜமீலாவை கௌரவிக்கும் விதமாக 2020ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழாவில் அவருக்குத் ‘தமிழவேள் விருது’ வழங்கப்பட்டது.

1953ல் கவிஞர் ஜமீலா எழுத்துலகில் காலடி எடுத்து வைத்தார். தம் கவிதைகளை எழுதுவதற்குப் பநாஸ், தீன் தாஸ் எனச் சில புனைபெயர்களை வைத்துக்கொண்டாலும் தம் தங்கையின் மீது கொண்ட அளவு கடந்த பாசத்தின் காரணமாக அவர் ஜமீலா என்ற புனைபெயரைத் தமக்குச் சூட்டிக்கொண்டார்.

அச்சு வசதி இல்லாத காலத்தில் கையெழுத்து இதழை உருவாக்கி வெளியிட்ட அவர், 1957ல் தமது நண்பரான கவிஞர் க.து.மு. இக்பாலுடன் இணைந்து ‘உமறுப்புலவர் நினைவு மலர்’ எனும் கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டார்.

“1950களிலிருந்து நான் கவிஞர் ஜமீலாவுடன் நெருக்கமான நட்பு கொண்டுள்ளேன். அவருடன் இணைந்து பல மலர்களை எழுதியுள்ளேன். அவரது மறைவு வருத்தத்தை அளிக்கிறது,” என உணர்வுபொங்கக் கூறினார் கவிஞர் க.து.மு. இக்பால், 85.

பெருநாள் மலர், மீலாத் மலர், திருவள்ளுவர் மலர் போன்ற பல்வேறு மலர்களில் கவிஞர் ஜமீலாவின் படைப்புகள் வெளிவந்துள்ளன. மலர் வெளியிடும் வழக்கம் கொண்ட அவர் சிங்கப்பூர் இதழியல் முன்னோடியாகப் போற்றப்படுகிறார்.

கவிதைகளை வடிப்பதில் அதிக நாட்டம் கொண்டிருந்த அவர் புதுக்கவிதை எழுதும் திறன் மிக்கவர். பிறமொழி இலக்கியங்களில் உள்ள நல்ல கருத்துகளைத் தழுவிப் பல கவிதைகளைப் பாடியுள்ளார்.

2005ல் தேசியக் கலை மன்றமும், சிங்கப்பூர் பிரஸ் அறநிறுவனமும் இணைந்து தேசிய அளவில் நடத்திய இலக்கியப் போட்டியில் கவிதைப் பிரிவில் முதல் பரிசை வென்று அரசின் தங்கமுனை விருதைப் பெற்றுள்ளார் கவிஞர் ஜமீலா.

அவரைப் பாராட்டும் நோக்கில் 2007ஆம் ஆண்டில் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகமும், வளர்தமிழ் இயக்கமும் இணைந்து ஏற்பாடு செய்த பாரதியார்-பாரதிதாசன் விழாவில் விருது வழங்கப்பட்டது.

“புதிய கவிஞர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்தியாக இருந்தவர் கவிஞர் ஜமீலா. முன்னோடிக் கவிஞரான அவர் பல கவிதைகளை எழுதியுள்ளார். அவருடைய படைப்புகளை தேசிய நூலக வாரியத்தின் மின்வளங்களில் பெற்றுக்கொள்ளலாம்,” என்றார் கவிமாலை அமைப்பின் தலைவர் கவிஞர் இன்பா.

சிங்கப்பூர்த் தமிழ்க் கவிதைத் துறையை தமது கவிதைகளால் வளப்படுத்த உதவிய கவிஞர் ஜமீலாவைச் சிறப்பிக்க 2016ஆம் ஆண்டு சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், உமறுப்புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதி, உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை இணைந்து படைத்த உமறுப்புலவர் நினைவு அரங்கத்தில் அவருக்கு ‘அ. நா. மெய்தீன்’ விருது அளிக்கப்பட்டது.

“சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகளுள் ஒருவராக விளங்கிய என் தாத்தாவின் மறைவு சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய உலகில் ஈடு செய்யமுடியாத ஓர் இழப்பு. அவருடைய கவிதைகள் என்றும் சிங்கைத் தமிழ் இலக்கியப் பெட்டகத்தில் ஒரு பொக்கிஷமாக விளங்கும். ‘தங்கவாப்பா’ என்று பேரப்பிள்ளைகளால் செல்லமாக அழைக்கப்படும் தாத்தாவின் புன்னகையும் நகைச்சுவையான பேச்சும் என்றும் எங்கள் நினைவுகளில் இருக்கும்,” என்று கவிஞர் ஜமீலாவை நினைவுகூர்ந்தார் அவரது பேரன் முஹம்மது ஷஹீர், 29.

குறிப்புச் சொற்கள்