கடல்கடந்து சிங்கப்பூருக்கு வந்து வேலை செய்யும் இந்திய ஊழியர்களுக்கு தைப்பூசத் திருவிழா போன்ற விழாக்கள் மனதில் ஆழமாக பதிந்தவை. சொந்த பந்தங்களுடன் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாட முடி யாது என்றாலும் இங்கு சைவ உணவு உண்டு சக நண்பர்களுடன் சேர்ந்து உறவாடும் வாய்ப்பு இவர்களுக்கு ஒருவித ஆறுதலைத் தருகிறது. அவ்வகையில், இந்த வாய்ப்பை மூன்று அமைப்புகள் 5,000க்கும் மேற்பட்ட இந்திய வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கின. 'ஃபார்ம்கிரீன்', 'கிளியர்விஷன்ஸ்', 'டிஇஜி' அனைத்துலக கல்லூரி ஆகியவை இணைந்து தைப்பூசத் திருவிழாவுக்கு முந்தைய நாளான இம்மாதம் 20ஆம் தேதி மாலையிலிருந்து சைவ உணவு விருந்துக்கும் வழிபாட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தன. இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்க லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம், 'மாடர்ன் மோண்டிசோரி' நிறுவனம், வெளிநாட்டு ஊழியர் நிலையம் (MWC) ஆகியவை இணைந்தன. ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தைச் சேர்ந்த 15 முதியவர்களும் இந்த விருந்து உபசரிப்புக்கு அழைக்கப்பட்டனர். கிராஞ்சி பகுதியில் நடந்த இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங். சிறப்புக் கூடாரத்தில் அமைக்கப்பட்ட வழிபாட்டு அங்கத்தில் கலந்துகொண்டு விருந்துக்கு வந்தவர்களுக்கு உணவு பரிமாற திரு லூயிஸ் இங் முன்வந்தார். "நாம் வீட்டில் சௌகரியமான சூழலில் வாழ்வதற்கு வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பும் அடங்கியுள்ளது. சிங்கப்பூரில் அவர்கள் இயல்பான வாழ்க்கையை நடத்த நாமும் உதவலாம். ஏனெனில் சொந்தங்களைப் பிரிந்து நீண்டகாலம் இங்கு வேலை செய்வது அவர்களுக்கு சற்று கடினமாக இருக்கலாம். "இவர்களை அங்கீகரிக்க சமூகமும் பங்காளிகளும் ஒன்றுகூடியது மகிழ்ச்சியைத் தருகிறது," என்றார் திரு இங். கிராஞ்சி பகுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அறிமுகமான இவ்விருந்து நிகழ்ச்சி இப்போது தீவிலுள்ள மற்ற விடுதிகளில் தங்கும் வெளிநாட்டு ஊழியர்களையும் சென்று அடைகின்றது. "முதலில் இம்முயற்சியை ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தொடங்கியபோது சுமார் 300 வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு பரிமாறினோம். இன்றோ இந்த முயற்சி பலமடங்கு பெருகி, புதிய பங்காளி களுடன் இணைந்து பெரிய அளவில் இந்த நிகழ்ச்சியை நடத்த முடிகின்றது," என்றார் ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெறும் சு.தினகரன், 58. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கரகாட்டம், தமிழ்த் திரைப்படம் திரையிடுதல், கிராமியப் பாடல் அங்கம் போன்ற ஏதாவது ஓர் அம்சத்தை நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ள ஏற்பாட் டாளர்கள் பரிசீலித்து வருகின் றனர். மூன்றாவது ஆண்டாக இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கும் வெளிநாட்டு ஊழியர் நிலையம், வெளிநாட்டு ஊழியர்களுக்கு ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களை அன்பளிப்பாக வழங்கியது.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு தைப்பூச விருந்து உபசரிப்பு
2 mins read
கிராஞ்சி லூப் பகுதியில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உணவு பரிமாறும் நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் (வலமிருந்து இரண்டாவது). படம்: ரிஷி -

