'தமிழ் மொழி சோறு போடுமா?' என்ற கேள்வியை எழுப்புபவர்களுக் கான பதில் இவ்வாண்டின் முத்தமிழ் விழாவில் கூறப்பட்டது. தமிழ் மொழி விழாவின் ஓர் அங்கமான இம்முத்தமிழ் விழா 24ஆவது முறையாக சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் ஏற்பாட்டில் மார்ச் 31ஆம் தேதியன்று உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் உள்ளூர் எழுத்தாளர்களை ஆண்டுதோறும் அங்கீகரிக்கும் தமிழவேள் விருது திரு எம். கே. நாராயணனுக்கு வழங்கப்பட்டது. ஒலிக் களஞ்சியத்தின் தலைவராகப் பணியாற்றியவரும் உள்ளூர் எழுத்தாளருமான திரு எம். கே. நாராயணன் சார்பாக அவரது குடும்பத்தினர் அவ் விருதைப் பெற்றுக்கொண்டனர். அவ்விருதை விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நாடாளுமன்ற நியமன உறுப்பினர் திரு. முஹம்மது இர்ஷாத் வழங்கினார். அதைத் தொடர்ந்து சிறு உரையாற்றிய திரு எம். கே. நாராயணனின் மகன் பேராசிரியர் முனைவர் கணபதி, தாமும் தமது உடன்பிறப்புகளும் நன்றாகப் படித்து நல்ல வேலைகளில் இருப்பதற்கு தமிழ் மொழி பெரிதும் கைகொடுத்ததாகக் கூறினார். தமது தந்தை மட்டுமே சம்பாதித்தாலும் நல்ல நிலைமையை அடைந்ததன் மூலம் தமிழ் மொழி அவர்களுக்குச் சோறு போட்டதாக குறிப்பிட்ட அவர் தமிழ் மொழிக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். கல்வி அமைச்சின் தமிழ் மொழி கற்றல், வளர்ச்சி குழுவின் ஏற்பாட்டில் வளர் தமிழ் இயக்கத் தின் ஒருங்கிணைப்புடன் நடை பெறும் தமிழ் மொழி விழாவின் அங்கமாக இவ்விழா நடைபெற்றது. அதில் சின்னஞ் சிறார்களுக் கான மாறுவேடப் போட்டியின் இறுதிச் சுற்றும் நடைபெற்றது. மணிமேகலை, பீமர், ஜான்சி ராணி போன்ற பல காப்பிய வேடங்களில் மழலை மொழி பேசிய பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரைக் கவர்ந்தனர். 'சிற்பிகள்' குழுவின் நடன அங்கம் பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தன. அத்துடன், பேச்சுப் போட்டி, கதை சொல்லும் போட்டி, சொல்லுக்குச் சொல், செய்தி எழுதும் போட்டி, சிறுகதை எழுதும் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்குப் பரிசு களும் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கான சிறு கதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் இவ்விழா வில் பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவின் சிறப்புப் பேச்சாளராக முனைவர் க.சுபாஷிணி கலந்துகொண் டார். ஜெர்மனியில் தமிழ் மரபு அறக்கட்டளையைத் தொடங் கியவர்களில் ஒருவரும் அதன் தற்போதைய தலைவருமான அவர் 'தமிழ்ச் சுவடுகள்-வரலாறும் வாழ்வும்' எனும் தலைப்பில் தமிழ் மொழியின் வரலாற்றைத் தமது சிறப்புரையில் படைத்தார். மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகளை நடத்துவதன் மூலம் இளையர்களை தொடர்ந்து தமிழ் மொழியில் பேசவும் வாசிக்கவும் ஊக்குவிப்பது அவசியம் என்று கூறிய நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான திரு இர்ஷாத், சக தமிழர்களிடம் தமிழில் பேசுவதை ஒரு கொள்கையாக வைத்துக் கொள்ளுமாறு கூறினார்.
(இடமிருந்து) சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் செயலாளர் சுப அருணாசலம், முனைவர் சுபாஷினி, 'தமிழவேள்' விருது பெற்ற திரு எம். கே. நாராயணனின் துணைவியார் சரஸ்வதி, அவரது மகன் முனைவர் கணபதி, நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது இர்ஷாத், சிங்கப்பூர் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் நா. ஆண்டியப்பன். படங்கள்: சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் 2019-04-07 06:10:00 +0800

