வார இறுதியில் கேளிக்கை கூடத்திற்கு குணா (கற்பனைப் பெயர்) செல்வதும் அங்கு சண்டை சச்சரவுகள் நடப்பதும் வழக்கம்.
ஒருமுறை, தமது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து குணா ஈடுபட்ட ஒரு சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். மூவரும் கைது செய்யப்பட்டனர். குணா குறைந்தது 10 ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார். வாழ்க்கையே கேள்விக்குறியானது.
குழப்பமான நிலையில் இருந்தவருக்கு தெளிவான பாதையைக் காட்ட சானா இந்து சமய தொண்டூழியர் ஒருவர் முன்வந்தார். முதலில் பயனுள்ள வழிகளில் சிறையில் நேரத்தை செலவிடுவது குறித்து அவர் குணாவுக்கு ஆலோசனை வழங்கினார். சிறையில் ஏற்பாடு செய்யப்பட்ட தன்முனைப்பு பேச்சுகளிலும் குணா பங்கேற்றார்.
தைப்பூசம், தீமிதி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்
படுவதற்கான காரணங்களையும் இந்து சமயம் பற்றிய விளக்கங்களையும் தொண்டூழியர் மூலம் குணா அறிந்துகொண்டார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆலோசனைத் திட்டத்தில் ஈடுபட்டு வந்த குணா, வழிபாட்டு முறைகளைக் கற்று இசைக் கருவிகளை வாசித்தபடி பஜனை செய்யத் தொடங்கினார்.
குணா இப்படி மாறுவதற்கு தொண்டூழியர்களின் அன்பே அடித்தளமாக அமைந்தது.
‘‘கோபத்தைக் கட்டுப்படுத்தவும் மற்றவர்களிடம் அன்பாகப் பேசவும் பழகினேன். குடும்பத்தினரோடு நல்லுறவை வளர்த்துக்கொள்வது பற்றியும் எதிர்கால வாழ்க்கை இலக்குகள் குறித்தும் சிந்திக்கத் தொடங்கினேன். தொண்டூழியர்களின் ஆலோசனைகள் சிறைவாசத்திற்குப் பிந்திய வாழ்க்கைக்கு என்னைத் தயார்ப்படுத்தியது,’’ என்று கூறினார் குணா.
சிறையிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்பிய குணாவிடம் குடும்பத்தினர் மாற்றங்களைக் கண்டனர். இரு மாதங்களில் குணாவுக்கு தளவாடத் துறையில் வேலை கிடைத்தது. ஓராண்டுக்குப் பிறகு மேற்பார்வையாளர் பதவிக்கு உயர்ந்தார்.
புதிய திறன்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற துடிப்பு அவருக்கு விமானத் தளவாடத் துறையில் வேலை பெற்றுத் தந்தது. அங்கும் பணியில் சிறந்து பதவி உயர்வு பெற்றதால் அவரது பொருளாதார நிலை மேம்பட்டது.
வேலை–யி–லி–ருந்து ஓய்வுபெற்ற பெற்றோரை நன்கு பராமரிக்க வேண்டும், அர்த்–த–முள்ள வாழ்க்கையை வாழவேண்டும் என்பதில் குணா உறுதியாக உள்ளார்.