தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் 14.07.2019 அன்று ‘அன்னையர் திலகம்’ விருது வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது. அத்துடன் தொடக்கநிலை மற்றும் உயர்நிலை மாணவர்களுக்கு ‘அன்னை என்கிற அணையா விளக்கு’ என்ற தலைப்பில் ஓவியப்போட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தது.
ஓவியப்போட்டி கடந்த 7ஆம்தேதி கேலாங் ஈஸ்ட் தேசிய நூலகத்தில் நடத்தப்பட்டது. தொடக்கப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது.
மாலை 4 மணியளவில் மாணவர்கள் பங்குபெற்ற, ‘துணைப்பாட நடவடிக்கைகள் மாணவர்களுக்குச் சுகமா? சுமையா?’ என்ற தலைப்பிலான சுட்டிப் பட்டிமன்றம் முனைவர் ராஜி சீனிவாசன் தலைமையில் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாக அன்னையர்களுக்கு 'அன்னையர் திலகம்' விருது வழங்கப்பட்டது. 87 வயதான திருமதி கமலா சண்முகம், 89 வயதான திருமதி மாலதி என்கிற குப்பம்மாள் அப்பு, திருமதி ஸ்வப்னஸ்ரீ ஆனந்த் ஆகிய மூவருக்கும் கிரீடம், பொற்காசு, பொன்னாடை, சான்றிதழ் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.