பெண்களின் முகத்தில் உள்ள அழகை அகத்திலும் தக்கவைப்பது அவசியம் என்று உணர்த்துகிறது ‘சிங்கபோலிட்டன்’ எனும் அழகு ராணி போட்டி.
எந்த மாதிரியான உடல்வாகிலும் பெண்கள் அழகாகத் தோற்றமளிக்கலாம் என்பதை இந்தப் போட்டி வலியுறுத்துகிறது.
திருமதி வனிதா தேவி சரவணமுத்துவின் ஏற்பாட்டில் 2017ஆம் ஆண்டு சிங்கப்பூர் பெண்களுக்காக மட்டுமே தொடங்கப்பட்ட இந்த அழகு ராணி போட்டி இம்முறை அனைத்துலக ரீதியில் பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
இருபது முதல் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு ‘மிஸ் சிங்கபோலிட்டன்,’ ‘மிசஸ் சிங்கபோலிட்டன்’ ஆகியவற்றுடன் 40 வயதுக்கும் மேலானோருக்கு ‘எலிட் சிங்கபோலிட்டன்,’ என்று மொத்தம் மூன்று பிரிவுகளில் இந்த போட்டி நடைபெறுகிறது.
சிங்கப்பூர், இத்தாலி, தாய்லாந்து, வியட்னாம் உட்பட எட்டு நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கான தேர்வுச் சுற்று ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடந்தது. இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு மே மாதம் வரை பயிற்சிகள் வழங்கப்பட்டன.
சிறந்த தேசிய உடை அலங்காரம், சிறந்த திறன் சுற்று, கேள்வி பதில் சுற்று போன்ற நிலைகளில் அழகு ராணி போட்டியாளர்கள் திறமைகளை இறுதிச் சுற்றில் வெளிப்படுத்தவிருக்கின்றனர்.
சிங்கப்பூர் பெண்கள் எழுவரில் ஐவர் மாபெரும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர். அவர்கள் உட்பட மியன்மார், இந்தியா, வியட்னாம், தாய்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெண்கள் மொத்தம் 18 பேர் மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தேர்வுச் செய்யப்பட்டனர்.
‘மிஸ் சிங்கபோலிட்டன்’ பிரிவில் அறுவர், ‘மிசஸ் சிங்கபோலிட்டன்’ பிரிவில் எழுவர், ‘எலிட் சிங்கபோலிட்டன்’ பிரிவில் ஐவர் ஆகியோர் ஆகஸ்ட் 21 முதல் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் கலந்துகொள்வர்.
கலாசார பயணம், ஒத்திகைகள் போன்றவற்றுடன் மார்பகப் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் ஒளியை ஏற்படுத்துவதற்கான திட்டத்திலும் இறுதி சுற்றின் போட்டியாளர்கள் ஈடுபடுவர்.
‘மிஸ் சிங்கபோலிட்டன்’ பிரிவில் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 வயது தாரணி முதன்முறையாக இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
"மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சியை நிரப்ப உதவும் இப்போட்டியின் இந்த அங்கத்தில் நானும் பங்களிப்பதில் பெருமை கொள்கிறேன்,” என்று குறிப்பிட்ட அலுவலக நிர்வாக உதவியாளரான தாரணி இதுபோன்ற போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியப் பெண்கள் ஒருவரை ஒருவர் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
“12 ஆண்டுகளுக்கு முன்பு மார்பகப் புற்றுநோயால் அம்மாவை இழந்த எனக்கு இப்போட்டியின் மூலம் இந்நோயை பற்றிய விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மூன்று பெண்களுக்கு தாயான நான் குடும்பம், வேலை போன்ற பொறுப்புகளை சமாளித்து இப்போட்டியில் முன்னேறியது சவால்மிக்க பயணமாக இருந்தது,” என்று 37 வயது திருமதி காயத்திரி கூறினார்.
ஜோயாலுக்காஸ் வழங்கும் இந்நிகழ்ச்சியின் முதல் மூன்று பரிசுகளை தவிர்த்து 6 சிறப்பு விருதுகளும் வழங்கப்படும்.
போட்டியின் வெற்றியாளர்கள் 25ஆம் தேதியன்று சிங்கப்பூரில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் அறிவிக்கப்படுவர். இப்போட்டியைக் காண விரும்புவோர் திருமதி வனிதாவை 81613496 தொடர்பு கொண்டு நுழைவுச்சீட்டுகளைப் பெறலாம்.
இப்–போட்–டி–யின் முடி–வு–கள் வந்த இரண்டு வாரங்–க–ளுக்குப் பிறகு சோனி தொலைக்–காட்–சி–யில் இப்–போட்டி ஒளிப்–ப–ரப்–படும்.