மக்கள் சேவையில் மகிழ்ச்சி

மக்கள் சேவையில் மகிழ்ச்சி

2 mins read
4f9b91c1-1480-45e1-b5cc-52fac25a94bb
சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் சிறுநீரகவியல் பிரிவில் நோயாளி ஒருவருக்கு திருச்செல்வி ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் பொது மருத்துவ மனையில் பணியாற்றும் மூத்த தாதியர் குமாரி லட்சுமணன் திருச்செல்வி ஓர் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டார். தமது பராமரிப்பில் இருந்த 30 வயது நோயாளி ஒருவருக்கு கருப்பை புற்று நோய் (ovarian cancer) இருப்பது தெரிய வந்தது. அந்நோயாளி மனமுடைந்து போனார். தமது படுக்கையிலிருந்து சன்னல்களை பார்த்தவாறு நோயாளி அழுது கொண்டு இருந்தார். அவரின் போக்கை தாதி திருச்செல்வி கூர்ந்து கண்காணித்து வந்தார்.

தமது உயிரை மாய்த்துக்கொள்ளப் போவதாக நோயாளி திருச்செல்வியிடம் சொன்னார்.

நிலைமையைப் புரிந்து செயலில் இறங்கினார் தாதி திருச்செல்வி. தமது கதையை அவர் நோயாளிடம் பகிர்ந்துகொண்டார்.

திருச்செல்வி, கண்கலங்க வைக்கும் வாழ்க்கை போராட்டங்களிலிருந்து மீண்டு வந்தவர்.

குடும்பத்தில் மூத்த பிள்ளையான திருசெல்வி 1996ல் தமது ஒரே தங்கையை இழந்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மூளை பக்கவாதத்தால் தாயார் உயிரிழந்தார். குடும்ப உறுப்பினர் என்று சொல்லிக்கொள்ள இருந்த தந்தையும் நுரையீரல் புற்றுநோயால் மறு ஆண்டு இறந்தார்.

''எனக்குள் எத்தனையோ சோகங்கள் உண்டு, இருப்பினும் வாழத் துணிந்துள்ளேன். உனக்கு பெற்றோர் இருக்கிறார்கள். அவர்களுக்காவது நீ வாழ வேண்டும்,'' என்று அந்த நோயாளிக்கு தைரியமும் ஊக்கமும் தந்தார் தாதி திருச்செல்வி. அந்த நோயாளி அத்தருணமே மனம் மாறினார்.

தாதியர் துறை மக்கள் தொடர்புடையது என்று குறிப்பிட்ட தாதி திருச்செல்வி, நோயாளிகளிடம் அன்புடன் பழகுபவர்.

என் பராமரிப்பில் இருக்கும் நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பும்போது அது எப்போதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்,'' என்றார் 48 வயது திருச்செல்வி.

'Willing Hearts' எனும் தொண்டூழியர்களால் நடத்தப்படும் அமைப்பில் இவர் வாரத்தில் மூன்று முறையாவது வசதி குறைந்தவர்களுக்கு உணவு சமைக்க உதவுகிறார்.

"மேலும், ஸ்ரீ மன்மத காருணீஸ்வரர் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் தொண்டூழியம் செய்து வருகிறார். தமது மூத்த நோயாளிகள் சிலரை அந்த ஆலயங்களுக்கு அழைத்துச் செல்வதிலும் அவருக்கு மனதிருப்தி கிடைக்கிறது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சுகாதாரப் பராமரிப்பு உதவியாளராக 2005ல் சேர்ந்த திருச்செல்வி, படிப்படியாக மூத்த தாதியராக உயர்ந்து தற்போது சிறுநீரக பிரச்சினைகள் உள்ள நோயாளிகளை பராமரிக்கிறார்.

திருச்செல்வி ஒரு தாதியராவது அவரின் தாயாரின் நீண்ட நாள் கனவாக இருந்தது. அந்த கனவை நனவாக்கி தற்போது அதற்கான அங்கீகாரமும் கிடைத்துள்ளதால் தாதி திருச்செல்வி பெருமிதம் கொள்கிறார்.