சிங்கப்பூரின் 200வது ஆண்டு நிறைவாக ‘யாதுமாகி’ என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழாவிற்கு கவிமாலை ஏற்பாடு செய்திருக்கிறது. சிங்கப்பூரில் கவிதைகளை எழுதிய, எழுதிக்கொண்டிருக்கும் 50 பெண்களின் 200 கவிதைகளைக் கவிஞர் இன்பா இந்நூலில் தொகுத்திருக்கின்றார்.
செப்டம்பர் முதல் தேதி மாலை 6 மணிக்கு தேசிய நூலக வாரியத்தின் 16வது மாடியில் அமைந்துள்ள The Pod அறையில் வெளியீட்டு விழா நடைபெறும். விழாவில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் (ஓய்வு) முனைவர் சித்ரா வரபிரசாத் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் முனைவர் சித்ரா சங்கரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்கின்றனர்.
முனைவர் சரோஜினி செல்லகிருஷ்ணன் தலைமையில் ‘இன்று இவர்கள் இங்கே’ என்ற கவியாடல் இடம்பெறுகிறது. இதில் வள்ளுவரின் வாசுகியாக பானு சுரேஷ், கண்ணகியாக கலைச்செல்வி வைத்தியநாதன், மாதவியாக ப்ரியா தனசேகரன், மணிமேகலையாக வீர.விசயபாரதி, ஔவையாராக சக்திதேவி தமிழ்ச்செல்வன், திரௌபதியாக வினுதா கந்தகுமார் ஆகியோர் கவிதை படைக்கவிருக்கின்றனர். தொடர்ந்து உயர்நிலைப்பள்ளி மாணவிகளின் ‘கவிதை கேளுங்கள்’ அங்கம் இடம்பெறும். நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.