இந்திய சமூகத்தினரிடையே ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வை அதிகரிக்கும் நோக்கத்தில் வருடாந்திர நிகழ்ச்சியாக ‘இனி எல்லாம் நலமே’ சுகாதார விழா ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது.
மக்கள் கழக இந்தியர் நற்பணிப் பேரவை, அங் மோ கியோ குழுத்தொகுதி, செங்காங் வெஸ்ட் தனித் தொகுதி ஆகியவற்றின் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள், நற்பணிப் பேரவையின் இளையர் பிரிவு, மீடியாகார்ப் நிறுவனத்தின் எதிரொலி பிரிவு ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தன.
ஆங்கர்வேல் சமூக மன்றத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 600 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு மூன்று கிலோ மீட்டர் தூர ஓட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். யோகா, ‘ஸூம்பா’ நடனம் போன்ற மற்ற ஆரோக்கிய நடவடிக்கைகளிலும் வட்டாரவாசிகள் பங்கேற்றனர்.
சுகாதார அமைச்சு, போக்குவரத்து அமைச்சுகளுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சுகாதார மேம்பாட்டு வாரியம், சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம், சிங்கப்பூர் தேசிய கண் நிலையம் ஆகிய அமைப்புகள் இணைந்து மருத்துவப் பரிசோதனைகளை நடத்தின.
“பரபரப்பான வேலைச் சூழல் காரணமாக சிலரால் வழக்கமாக உடற்பயிற்சி செய்ய முடியாமல் போகலாம். அவர்களைப் போன்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உதவும். சமூக உணர்வுடன் உடற்பயிற்சி செய்ய வாய்ப்பு அளிப்பதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கவும் இது ஊக்கமளிக்கிறது. பயனுள்ள பல சுகாதார பராமரிப்புத் தகவல்களும் இந்நிகழ்வில் பகிரப்பட்டன,” என்றார் பல்கலைக்கழக மாணவரான திரு ரவி சிங்காரம், 24.