வி.கே.சந்தோஷ் குமார்
இளமை, சுறுசுறுப்பு, உத்வேகம். இந்த பண்புநலன்களே சிங்கப்பூர் இந்தியர் சங்கத்தின் தலைவர் பொறுப்புக்குத் தம்மைத் தூக்கி நிறுத்தின என்கிறார் திரு வி.பிள்ளை, 42.
சங்கத்தின் தேர்தலில் அவரும் அவரது குழு உறுப்பினர்கள், குறிப்பாக, கே.தமிழ்மாறன் மற்றும் பி.நமசிவாயம் (துணைத் தலைவர்கள்), எம்.நித்தியநாதன் (விளையாட்டுக் குழுத் தலைவர்), ராஜ் தேவ் மற்றும் ரஞ்சித் சிங் (குழு உறுப்பினர்கள்) உள்ளிட்டோர் தலைமைப் பொறுப்புகளுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
கடந்த வாரம் சனிக்கிழமை நடைபெற்ற வருடாந்திர பொதுக் கூட்டத்தில் இத்தேர்தல் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் 200க்கும் அதிகமான சங்க உறுப்பினர்கள் பங்கெடுத்தனர்.
“இளம் வயதினரைக் கொண்ட குழு ஒன்றே சங்கத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்புகின்றனர். சங்கத்தின் முன்னாள் குழுவினர் தொடங்கிய திட்டங்களை மேம்படுத்துவதே எங்களது இலக்கு,” என்றார் எண்ணெய், எரிவாயு சஞ்சிகை ஒன்றின் ஆசிரியரான திரு பிள்ளை.
தனிப்பட்ட அளவில், இந்தியர் சங்கத்திற்குத் தாம் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு காலத்தில் சங்கத்திற்காக ஹாக்கி விளையாடிய அவர், விளையாட்டுத்துறையை வளர்க்க தாம் விரும்புவதாகக் கூறினார்.
“சிங்கப்பூரில் தலைசிறந்த கிரிக்கெட் குழுவாக இந்தியர் சங்கத்தை முன்னாள் குழுவினர் உருமாற்றினர். இந்த நிலையை நாம் கட்டிக்காக்க வேண்டும்.
“அதோடு, இந்தியர் சங்க ஹாக்கி குழுவை லீக்கிற்குள் மறு
படியும் நாம் கொண்டுவர வேண்டும். அதன் பொருட்டு, செயற்கைத் திடல் ஒன்றை அமைப்பது பற்றி நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,” என்றார் திரு பிள்ளை.
2007ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு வரை சங்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னாள் துணைத் தலைவர் வி.பி.ஜோதி, சங்கத்தின் தேர்தலில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பது தமக்குச் சற்று ஏமாற்றம் அளிப்பதாகச் சொன்னார்.
“இருப்பினும், இது ஜனநாயகச் செயல்முறை. எங்களுக்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை. சங்கத்திற்குப் புதிய குழுவினர் கூடுதலானவற்றை செய்ய முடியும் என உறுப்பினர்கள் கருதுகின்றனர். அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புதிய குழுவினருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் திரு ஜோதி.
அதே கருத்தை எதிரொலித்தார் சங்கத்தின் முன்னாள் தலைவர் வி.கிரி முதலியார்.
“எனக்கு ஏமாற்றம் எதுவும் இல்லை எனச் சொல்ல முடியாது. இன்னொரு தவணை செயலாற்றுவோம் என எதிர்பார்த்தோம். ஆனால், உறுப்பினர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
“இளைய தலைவர் ஒருவர் தலைமைப் பொறுப்பை ஏற்பதில் எனக்கு மகிழ்ச்சி. சங்கத்தைப் புதிய உச்சத்திற்கு அவர் இட்டுச்செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார் திரு முதலியார்.