சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சென்ற மாதம் 22ஆம் தேதி பெரியாரின் 141ஆம் ஆண்டு பிறந்தநாளை ‘பெரியாரும் மனிதநேயமும்’ என்ற தலைப்பில் கொண்டாடியது.
நிகழ்ச்சியில் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். விழாவின் பொருட்டு, தொடக்கநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, பாடல் போட்டி, பொன்மொழிகளை வாசித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
உயர்நிலைப்பள்ளி பிரிவில் முதல் பரிசு பெற்ற யூனிட்டி உயர்நிலைப்பள்ளி மாணவி யாழினி, பொன்மொழிகளை வாசித்துக் காட்டினார். ‘ஜெய் துணைப்பாட மைய’ ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து ‘பெரியார் ஒரு சகாப்தம்’ என்ற தலைப்பில் வில்லுப்பாட்டு வழங்கி மகிழ்வித்தனர்.
திரு நாகை தங்கராசுக்கு, சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் இவ்வாண்டுக்கான ‘பெரியார் விருதை’ வழங்கி கௌரவப்படுத்தியது. அத்துடன், ‘கந்தசாமி கல்வி அறக்கட்டளை’க்கு நன்கொடையும் வழங்கியது. அதை தமிழர் பேரவைத் தலைவர் வெ.பாண்டியன் பெற்றுக்கொண்டார்.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் துணைத் தலைவர் நா.ஆண்டியப்பன் நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கினார். பெரியாரின் மனிதநேயம் என்ற தலைப்பில் திருமதி மலையரசி உரையாற்றினார்.