அங்காரா: சிரியாவில் துருக்கிய ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலை நிறுத்த முடியாது என்று துருக்கிய அதிபர் டயிப் எர்டோவன் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் கூறியுள்ளார்.
சிரியாவை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறிய பின் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடிய குர்தியப் போராளிகள் மீது துருக்கிய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தனி நாடு கேட்கும் குர்திய மக்கள் தங்கள் நாட்டிலும் எல்லையிலும் இருப்பதை ஆபத்தாக துருக்கிய அதிபர் எர்டோவன் கருதுவதே தாக்குதலுக்குக் காரணமாகியுள்ளது. தாக்குதல்கள் தொடரும் பட்சத்தில் துருக்கியின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்றும் திரு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார். ஆனால், தாக்குதலை ஒருபோதும் நிறுத்தமாட்டோம் என அதிபர் எர்டோவன் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
அமெரிக்காவின் பொருளாதார தடையைச் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதனால் வரும் நாட்களில் வடக்கு சிரியாவில் நடக்கும் தாக்குதல்களால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே ரஷ்ய அதிபர் புட்டின் சிரியாவின் நிலை குறித்து எர்டோவனுடன் தொலைபேசிவழி பேசியதுடன் ரஷ்யாவுக்கு வர அழைப்பும் விடுத்ததாக புட்டினின் அலுவலகம் கூறியுள்ளது.