இந்திய நாட்டு ஊழியர்கள் சிங்கப்பூருக்கு அளிக்கும் பங்கை அங்கீகரிக்கும் வகையில் டிசம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுகிழமை ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயமும் ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச அமைப்பும் சேர்ந்து ஏறத்தாழ 300 இந்திய ஊழியர்களுக்கு விருந்தளித்து மகிழ்ந்தன.
“இந்திய ஊழியர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றி வரும் பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சியை எற்பாடு செய்தோம். ஊழியர்களின் தன்னார்வ மனப்பான்மைக்கும் சேவைக்கும் நாங்கள் நன்றி சொல்ல விரும்புகிறோம்,” என்றார் ஸ்ரீ ருத்ர காளியம்மன் ஆலயத்தின் நிர்வாகக் குழுத் தலைவர் திரு அழகப்பன்.
வெளிநாட்டு ஊழியர்கள் சிங்கப்பூரின் பல துறைகளில் குறிப்பாக கட்டுமானத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். மேலும் தைப்பூசம், தீமிதித் திருவிழாக்கள், குடமுழுக்கு விழாக்கள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தொண்டாற்றுகின்றனர் என்றார் திரு அழகப்பன்.
கிட்டத்தட்ட நான்கு மணிநேரம் நீடித்த விருந்து நிகழ்ச்சியில் சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரி திரு நிதின்ஜீட் சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
“தீபாவளி ஒருநாள் நிகழ்வு அல்ல. தொடர்ந்து கொண்டாடலாம்.ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எங்களால் முடிந்த சிறிய வழிகளில் மகிழ்ச்சி ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்த ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்,” என்றார் திரு அழகப்பன். செய்தி: எஸ்.வெங்கடேஷ்வரன்