மணிமாறன் நினைவாக இசை நிகழ்ச்சி

மணிமாறன் நினைவாக இசை நிகழ்ச்சி

1 mins read
fe29d12c-0093-4202-8688-485acd30f7f7
கலைஞர்களுடன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜேபி மணிமாறனின் மனைவி கெளசல்யா (வெள்ளை சேலையில்). படம்: 7 ரிதம்ஸ் புரொடக்‌ஷன்ஸ் -

உள்ளூர் ஒளிவழி பாட்டுத் திறன் போட்டியில் 1988ல் தயமாகி பாடகராகவும் புல்லாங்குழல் கலைஞராகவும் புகழ்பெற்றார் திரு சுப்ரமணியம் மணிமாறன்.

கடந்தாண்டு ஜனவரி மாதம் காலமான திரு மணிமாறனின் நினைவாக '7 ரிதம்ஸ் புரொடக்‌ஷன்ஸ்' நிறுவனம் கடந்த 4ஆம் தேதியன்று இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

கிரேத்தா ஆயர் பீப்பள்ஸ் தியேட்டரில் நடந்த இந்த நான்கு மணி நேர நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 70 உள்ளூர், மலேசிய இசைக் கலைஞர்கள் ஒன்றுகூடி, அமரர் மணிமாறனின் விருப்பமான கீதங்களைப் பாடினர்.

ஜோகூர் இந்தியர் இசைக் குழுவின் நேரடி இசையுடன் 'விஜய் டிவி சூப்பர் சிங்கர்' பாட்டுத் திறன் போட்டி புகழ் ஃபரிடாவும் நிகழ்ச்சியில் இணைந்தார்.

அவருடன் நிகழ்ச்சிகளில் பாடிய மூத்த பாடகர்களான மலர்விழி, செளந்தரவள்ளி, குணசெல்வம், டி.எம்.எஸ் குணா, டி.எம்.எஸ் சிவகாந்தன் ஆகியோர் 1960களிலிருந்து 1980 வரையிலான தமிழ் பாடல்களைப் பாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

திரு மணிமாறனின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் 10 நிமிட புகைப்பட காணொளியும் மேடையில் ஒளிபரப்பானது.

"திரு மணிமாறன் ஒரு திரைப்படப் பாடலைப் பாடும்போது, அந்த பாடலை எந்த பின்னணி பாடகர் பாடினாரோ அதே பாணியில் அப்பாடலைப் பாடக்கூடிய திறன் படைத்தவர்.

"திரு மணிமாறன் எங்களைப் போன்ற இளம் பாடகர்களுக்கு ஒரு முன்மாதிரி,'' என்று குறிப்பிட்டார் நிகழ்ச்சியில் பாடிய இளம் உள்ளூர் பிரபலம் சுதாஷினி.