ஊரடங்கு காரணமாக ஸ்பெயினில் சிக்கித் தவித்த திரு லலித் குமார் கணேஷ், 30 (படம்), நாடு திரும்ப அங்குள்ள சிங்கப்பூர் தூதரகம் கை கொடுத்தது. கடந்த மாதம் 25ஆம் தேதி இவர் சிங்கப்பூர் திரும்பியபோதும் நேராக வீட்டிற்குச் செல்ல முடியவில்லை. வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவின்கீழ் 14 நாட்களுக்கு இவர் கிராண்ட் பார்க் ஹோட்டலிலேயே முடங்கினார்.
வெலன்சியாவில் உள்ள பெர்க்லி இசைக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பயின்று வரும் திரு லலித், "உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் பரவாயில்லை, சிங்கப்பூரில் இருப்பதே சிறந்தது," என்கிறார்.
ஹோட்டலில் தங்கியிருந்தபோதும் மடிக்கணினிமூலம் இவர் தொடர்ந்து வகுப்புகளில் பங்கேற்றார்; திட்டப்பணிகளை மேற்கொண்டார். இருந்தபோதும் ஸ்பெயினில் இருந்து தம் நண்பர்களும் இங்குள்ள தம் அன்புக்கு உரியவர்களும் மனரீதியாக ஆதரவு அளித்ததாக திரு லலித் நெகிழ்ச்சியுடன் சொன்னார்.
"எதிர்மறை எண்ணங்களைக் கைவிட்டு, சூழலுக்கேற்ப மனத்தை மாற்றிக்கொள்வது அவசியம். நம்மை நாமே புத்தாக்கமான முறையில் மாற்றிக்கொள்ள இந்த இரு வார காலம் நல்ல வாய்ப்பளித்தது," என்றார் திரு லலித்.

