கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புவோர் அனைவரும் 14 நாட்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அத்தகைய ஆணைக்கு உட்பட்ட சிலர், அந்த இரு வார காலத்தைக் கழித்த விதம் பற்றி தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
மருத்துவப் படிப்பை முடித்து, பயிற்சி பெற்றுவரும் ஐஸ்வரியா கிருபேஷ், 25, தம் தாயாருடன் அயர்லாந்திலிருந்து மார்ச் 28 ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பினார். ஆயினும், வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவால் இருவரும் சுவிஸோட்டல் ஸ்டாம்ஃபர்டில் 14 நாட்கள் தங்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக அயர்லாந்தில் இருந்துவரும் குமாரி ஐஸ்வர்யாவைக் காண அவரின் தாயார் கடந்த பிப்ரவரி மாதம் அங்கு சென்றார்.
"தந்தையைக் காண ஆவலாக இருந்த நான் உடனடியாக வீட்டிற்குத் திரும்ப முடியாது என்பதை அறிந்தபோது வருத்தம் அடைந்தேன்," என்றார் குமாரி ஐஸ்வர்யா. தாயாருடன் ஏற்கெனவே நெருக்கமாக இருந்தாலும் அவரது விருப்பங்களையும் வழக்கங்களையும் பற்றி இந்தச் சமயத்தில் மேலும் கேட்டுத் தெரிந்துகொண்டார் இவர். சக மனிதர்களுக்கு இடையிலான தொடர்பின் அருமையை இந்த அனுபவம் தமக்கு உணர்த்தியதாகவும் இவர் சொன்னார்.

