தினமும் மூன்று வேளையாவது தமது வீடமைப்புப் பேட்டையில் உள்ள கடைக்குச் செல்வார் திருமதி நா.லலிதாவின் கணவர். வேலையிலிருந்து அவர் ஓய்வுபெற்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன.
கடைக்குச் சென்று செய்தித்தாள் வாங்குவது, நண்பர்களைச் சந்திப்பது, விருப்பமான பலகாரங்களை வீட்டிற்கு வாங்கி வருவது போன்றவை அவரது அன்றாட நடவடிக்கைகளில் அடங்கும்.
கொவிட்-19 நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பிற்கு வந்ததிலிருந்து வழக்கமான நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லையே என்ற விரக்தி அவருக்கு ஏற்படுகிறது.
இதற்கு உதவும் வகையில், குறிப்பிட்ட நேரங்களில் வாட்ஸ்அப் காணொளி அழைப்புவழி தம் கணவரை அவரது நண்பர்களுடன் இணைக்க திருமதி லலிதா உதவுகிறார்.
இதன் மூலம் தம் நண்பர்களுடன் எப்போதும்போல உரையாடும் வாய்ப்பு திருமதி லலிதாவின் கணவருக்குக் கிடைக்கிறது.
தம் வீட்டிற்கு அருகில் 'பசார் மாலாம்' எனப்படும் இரவுச் சந்தை இடம்பெறுவதில்லை என்ற ஏக்கம் கணவருக்கு வரும்போது, அங்கு கிடைக்கும் உணவு வகைகள் சிலவற்றை வீட்டில் சமைக்க திருமதி லலிதா முனைகிறார்.
"இத்தருணத்தில் செய்ய முடியாத காரியங்களை எண்ணி வருந்தாமல் எதையெல்லாம் நம்மால் செய்ய முடியும் என்று யோசிக்க ஆரம்பித்தால் பல காரியங்களை வீட்டில் இருந்தவாறே செய்யலாம்," என்று தெரிவித்தார் திருமதி லலிதா, 60.
உதாரணத்திற்கு, வீட்டிலிருந்தவாறு தோட்ட வேலையில் ஈடுபட்டு எளிய முறையில் தட்டை மொச்சைகளைப் பயிரிடலாம் என்றார் அவர். அடிக்கடி பேரங்காடிக்குச் செல்லும் அவசியமும் இருக்காது என்று அவர் கூறினார்.
செய்தி: ப. பாலசுப்பிரமணியம்

