கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக இம்மாதம் 2ஆம் தேதியிலிருந்து தாதிமை இல்லங்களில் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது.
இருநூறு படுக்கைகளுக்கு மேல் கொண்ட வசதிகளுடன் இயங்கும் தாதிமை இல்லங்கள் தங்களது ஊழியரணியைப் பிரித்து, மாற்று இட/பகுதி ஏற்பாடுகளுடன் வேலையில் ஈடுபடுவதை உறுதிசெய்ய வேண்டும் என சுகாதார அமைச்சும் ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பும் அறிவுறுத்தின.
அந்த வகையில், ஈசூனில் அமைந்துள்ள ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லமும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அங்கு 212 பேர் தங்கியிருக்கின்றனர்.
இல்லவாசிகளின் குடும்பத்தினர் அங்கு வர அனுமதியில்லை என்பதால் திறன்பேசி மூலம் காணொளி வழியாக இல்லவாசிகள், தங்கள் குடும்பத்தினரைக் கண்டு உரையாட ஏற்பாடு செய்யப்படுகிறது.
அப்படித் தொடர்புகொள்ளும்போது, இல்லவாசிகளிடம் நடப்பிலுள்ள கட்டுப்பாடுகளைப் பற்றி விளக்குமாறு அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தாங்களும் வெளியே செல்ல முடியாமல், தங்களின் குடும்பத்தாரும் தாதிமை இல்லத்திற்கு வரமுடியாத சூழலில் இல்லவாசிகளின் மனநலத்தை உறுதிசெய்வது முக்கியமாகின்றது.
இதன் காரணமாக, கையடக்க மின்னிலக்கச் சாதனத்தில் திரைப்படம் பார்ப்பது, இசை கேட்பது போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளோடு வண்ணம் தீட்டுவது, கைவினைப் பொருட்கள் செய்வது போன்ற இதர நடவடிக்கைகளிலும் அங்குள்ள முதியவர்கள் ஈடுபடுகின்றனர்.
அண்மையில் தங்களது பராமரிப்புக் குழுவினருக்காக அங்குள்ள முதியவர்கள் வாழ்த்து அட்டைகளையும் தனித்துவமிக்க சாவிக்கொத்துகளையும் உருவாக்கினர்.
அடுத்ததாக அன்னையர் தினத்திற்காக இதர கைவினைப் பொருட்களை உருவாக்கவும் அவர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர்.
அவ்வப்போது தனிமை உணர்வை அவர்கள் அனுபவிப்பது இயல்புதான் என்றாலும் அதற்கான சாத்தியத்தைக் குறைக்கும் நோக்குடன் அவர்களைப் பராமரிக்கும் சுகாதார ஊழியர்கள் பலரும் இல்லத்திலுள்ள தங்கும் விடுதியிலேயே வசிக்கின்றனர்.
தாதிமை இல்லம் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட பராமரிப்பு ஊழியர்களே ஒதுக்கப்படுவதால் தினமும் அதே பழக்கப்பட்ட முகங்களை இல்லவாசிகள் பார்க்கின்றனர். இதனால் அவர்களுக்கிடையே ஒரு குடும்பம் போன்ற நெருக்கம் உண்டாகிறது.
"இதற்குமுன் இல்லாத வகையில் நமது சுகாதாரத்தை, குறிப்பாக முதியோரின் சுகாதாரத்தை அச்சுறுத்தி வருகிறது இந்த கொவிட்-19 கிருமித்தொற்று. இவ்வேளையில், நமது இல்லவாசிகளையும் சுகாதார ஊழியர்களையும் பாதுகாக்கத் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்," என்று ஸ்ரீ நாராயண மிஷன் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ்.தேவேந்திரன் தெரிவித்தார்.

