கொரோனா கிருமித்தொற்று காரணத்தால் உலகின் பல பகுதிகளில் மக்கள் அனைவரும் எதிர்பாராத வகையில் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கும் இச்சூழ்நிலையில், கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக தொண்டுள்ளம் கொண்டு அரும்பணி ஆற்றி வரும் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் பல்வேறு துறைகளைச் சார்ந்த தொண்டூழியர்களுக்கும் சமூகத்தின் சார்பாக நன்றி தெரிவிக்க முயற்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
துயரில் வாடும் பொதுமக்களுக்கு தன்முனைப்பு மற்றும் உற்சாகம் ஏற்படும் வகையில், நம்பிக்கையூட்டும் நற்செய்திகளை எடுத்துரைத்து இயல்பான வாழ்வைத் தொடர ஊக்குவிக்க, சமூக நலனைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூரில் ‘விரைவில் விடிந்துவிடும்’ என்ற எழுச்சிப் பாடல், நேற்று ஃபேஸ்புக்கில் நேரலையாக வெளியீடு கண்டது.
ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் தலைவரும் கணக்காய்வாளருமான முனைவர் மு.அ.காதர் எழுதிய இப்பாடலுக்கு சிங்கப்பூர் இசைக் கலைஞரும் பாடகருமான ‘இசை மணி’ பரசு கல்யாண் இசை அமைத்து காணொளியாக உருவாக்கியிருக்கிறார்.
சிங்கப்பூர், இந்தியா, மலேசியா, ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய ஒன்பது நாடுகளைச் சேர்ந்த இளமாறன் நடராஜன், சுந்தரி, விநாயா, தீபக், பெஞ்ஜமின், டாக்டர் ராஜீவ், கணேசன் ராமமூர்த்தி, வினோத், அந்தோனி பீட்டர் பிரபு, லாவண்யா சம்பத், சங்கீதா விஜய், தீபன், சுரேஷ் மகாலிங்கம், ஜீவ் தா மேன், மஹிமா ரவி, விஜய்சங்கர் உள்ளிட்ட இசைக் கலைஞர்கள் முதன்முறையாக இணைந்து இந்தப் பாடலைத் தயாரித்து உள்ளனர்.
சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு இராஜேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இப்பாடலை ஃபேஸ்புக்கில் நேரலையாக வெளியீடு செய்து, இப்பாடலின் சிறப்பியல்புகளைப் பற்றி எடுத்துரைத்தார்.
திரு கண்ணன் சேஷாத்ரி மற்றும் திரு ராஜேஷ் குமார் ஆகியோரின் தகவல் தொழில்நுட்ப உதவியுடன், திரு தமீம் அன்சாரி இந்நிகழ்ச்சியை இணையம்வழி தொகுத்து வழங்கினார்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மற்றும் சீன நண்பர்கள் ஒன்றுகூடி சமூக அக்கறையுடன் உருவாக்கியிருக்கும் ‘விரைவில் விடிந்துவிடும்’ என்ற எழுச்சிப் பாடல், சமய நல்லிணக்கத்திற்கும் புரிந்துணர்வுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இப்பாடலை https://youtu.be/bBIUIxRsq44 என்ற இணையப்பக்கத்தில் காணலாம்.