சம்பளம் இழந்தவருக்கு ஆறுதல்

சம்பளம் இழந்தவருக்கு ஆறுதல்

2 mins read
6ce5d06b-16fc-4410-8147-ec607963897e
தெமாசெக் அறநிறுவன தொண்டூ ழியர்கள் திரு ஜி. மோசஸின் (வலது) குடும்பத் திற்கு சமைத்த உணவுப் பொட்டலங்களை வழங்குகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கி. ஜனார்த்தனன்

குறைந்த ஊதியம் பெறும் துப்புரவுப் பணியாளர் திரு ஜி.மோசஸ், 57, ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துதான் வீட்டுக்கான ஒவ்வொரு செலவையும் செய்து வருகிறார். தற்போதைய கொரோனா நோய்ப்பரவலால் ஒரு மாத ஊதியத்தை இழந்த நிலையில் கூடுதல் நெருக்கடியை எதிர்நோக்கும் தமக்கு கிடைக்கும் சிறு உதவிகளால் தமது பாரம் குறைவதாக அவர் கூறுகிறார்.

'அன்புடன் அளிக்கப்படும் உணவு ஆதரவு' எனப்படும் 'ஃபூட் சப்போர்ட் வித் லவ்' (Food Support with Love) திட்டத்தின்கீழ் செயல்படும் இந்த அமைப்புகளின் கூட்டு முயற்சியால் பயன்பெறும் 2,800க்கும் அதிகமான குடும்பங்களில் திரு மோசஸின் குடும்பமும் ஒன்று.

இத்திட்டத்தின்படி 100,000க்கும் அதிகமான உணவுப்பொருட்களையும் 11,000க்கும் அதிகமான சிற்றுண்டிகளையும் வழங்கத் தொடங்கியுள்ளது அந்த அமைப்பு.

லெங்கோக் பாரூ பகுதியில் வசிக்கும் திரு மோசஸ், இத்திட்டத்தின்கீழ் மாதத்திற்கு இரு முறை உணவுப் பொருட்களைப் பெற்று வருகிறார்.

"சில நேரங்களில் காய்கறி, பால், அரிசி ஆகியவை கொடுக்கப்படும். சில நேரங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் தரப்படும்." என்று அவர் கூறினார். இந்த உதவியால் 20 வெள்ளி முதல் 30 வெள்ளி வரை பணம் மிச்சமாவதாகக் கூறினார். திட்டத்தின் பெயருக்குத் தகுந்தவாறே உணவு விநியோகம் செய்பவர்கள் எந்தச் சலிப்புமின்றி தம்மிடம் அன்புடன் பேசி பழகுவதாக திரு மோசஸ் கூறினார்.

சிறார் சங்கத்தில் குத்தகை முறையில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்யும் திரு மோசஸுக்கு இம்மாத சம்பளம் கொடுக்கப்படாததால் சிறு அளவிலான உதவியால் நிம்மதி அடைவதாகத் தெரிவித்தார். வாடகை வீட்டில்குடும்பத்துடன் வசிக்கும் தமக்கு இடம்பெயர்ந்த குருத்தெலும்பு, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பிலான உடல்நலப் பிரச்சினைகளால் மருத்துவ செலவுகளையும் சமாளிக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.

"என் மனைவி மருத்துவமனை ஒன்றில் சுகாதாரப் பராமரிப்பு ஊழி யராகப் பணியாற்றுவதால் குடும்பச் செலவுகள் ஓரளவு கட்டுப்படியாகிறது. எங்களது மூத்த மகன்கள் இருவருக்கும் தனித்தனி குடும்பங்கள் உள்ளன. என் மகள் சிறார் உளவியல் துறையில் படிக்கிறார். ஒரு மாதச் சம்பளத்தை இழப்பது குறித்து கவலையாக இருந்தாலும் அறநிறுவனங்களின் உதவியால் நிம்மதி அடைகிறோம்," என்று அவர் கூறினார்.

கொவிட்-19 நோய்ப்பரவலால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவுவதற்கான தெமாசெக் அறநிறுவனம், 'சேட்ஸ்' எனப்படும் விமான நிலைய தளச்சேவை, விமானப் பயண உணவு விநியோகச் சேவை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த உணவு விநியோகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

"தற்போதைய கொவிட்-19 பரவல் மனிதாபிமானத்தை முன்னிலைப்படுத்துகிறது. சிங்கப்பூரர்கள் அனைவரும் பசியின்றி இருப்பதை உறுதிசெய்யும் இந்தக் கூட்டு முயற்சியைத் தொடர நாம் அனைவரும் பாடுபட வேண்டும்," என்று 'தெமாசெக் ஃபவுண்டேஷன் கேர்ஸ்' அமைப்பின் தலைவர் திரு ரிச்சர்ட் மேக்னஸ் தெரிவித்தார்.