சிங்கப்பூரில் அண்மைய காலமாக உயிரை மாய்த்துக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்து உள்ளது.
எனினும், சமூகத்தில் குறிப்பாக இந்திய சமூகத்தில் இதுகுறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் எனும் நோக்கில் ‘உன்னை அறிந்தால்’ எனும் மெய்நிகர் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
‘ஆர்பிடி டிரென்ட்ஸ்’ அமைப்பின் திரு ரமேஷ் பட்பனவன், ‘பர்வீன்’ அழகு பராமரிப்பு நிலையத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சி கடந்த மாதம் இணையத்தில் நடந்தேறியது.
ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்ச்சியில் தங்கள் வாழ்வில் சந்தித்த சவால்கள், பிரச்சினைகள், மனவுளைச்சல் குறித்த அனுபவங்களையும் அவற்றை எப்படி சமாளித்தோம் என்பது பற்றியும் பலர் பகிர்ந்தனர்.
மேலும், பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக உள்ளூர் பாடகர்கள் பலர் இனிமையான பாடல்களைப் பாடி மகிழ்வித்தனர். பர்வீன் அழகு பராமரிப்பு நிலையத்தின் நிறுவனர் திருவாட்டி கத்திஜா பேகமும் அவரது மகள் ரெஜினாவும் அழகு பராமரிப்பு குறிப்புகளை நிகழ்ச்சியில் வழங்கினர்.
“உடலும் உள்ளமும் அழகாக இருந்தால் மனவுளைச்சலை வெகுவாகக் குறைக்கலாம். அதனால்தான் பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் அதேவேளையில், பாடல்கள், அழகு குறிப்புகள் மூலம் பார்வையாளர்களுக்கு உற்சாகமளிக்க வேண்டும் என்று விரும்பியதால் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தேன்,” என்றார் திரு ரமேஷ், 44.
அத்துடன், ‘வாக் த டாக்’ எனும் புதிய விழிப்புணர்வுத் திட்டம் பற்றி திருமதி ஹபிடா ஷா பகிர்ந்துகொண்டார். மனவுளைச்சலால் பாதிக்கப்பட்டோர் ஒன்றுசேர்ந்து இயற்கைச் சூழலை ரசித்தபடி நடைப்பயிற்சி மேற்கொள்ளும் புதிய முயற்சி இது.