மனதில் திடமிருந்தால் வயது பொருட்டல்ல

மனதில் திடமிருந்தால் வயது பொருட்டல்ல

3 mins read
aa0a5c39-233c-4cef-9805-abc3817cc167
100 கி.மீ. கடந்து சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குழுவின் (இடமிருந்து) திரு ரா.தனபால் (68), திரு பெ.துரைராஜு (58), திரு எம்.கே. ராஜேந்திரன் (57), திரு த.ஜெயகுமார் (64), திரு ரா.சுப்பிரமணியம் (57). படங்கள்: திமத்தி டேவிட் -
multi-img1 of 3

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஐந்து பேருக்கும் பழக்கம். இளம் வயதிலிருந்தே ஓட்டத்தில் அதிக ஆர்வம் கொண்ட ஐவரும், ஓட்டப்பந்தயங்களில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்த விளையாட்டு வீரர்கள்.

'சுவிஃப்ட் எத்லிட்ஸ்' சங்கத்தைச்சேர்ந்த இவர்கள் வேலை, குடும்பப் பொறுப்புகளுக்கு அப்பால் தங்களுக்குள் இருக்கும் விளையாட்டு வீரருக்கான நிபுணத்துவப் பண்புகளையும் இன்றுவரை கட்டிக்காத்து வருகின்றனர்.

இவர்கள் 55 வயதிற்கும் மேற்பட்டவர்கள். இருந்தாலும் கடந்த 20ஆம் தேதி ஐவரும் இணைந்து படைத்த சாதனையை எண்ணிப் பார்த்தால், வயதுக்கும் ஆற்றலுக்கும் தொடர்பு உள்ளதா எனச் சிந்திக்கத் தூண்டுகிறது.

பொங்கோல் பூங்காவில் தங்கள் நடையைத் தொடங்கி புக்கிட் தீமா சாலையில் முடித்துக்கொண்டு தலா 20 கி.மீ. வரையில் நடந்து சாதித்தனர். கூட்டாக 100 கி.மீ. தூரத்தைக் கடந்துவந்து சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நீண்டதூர நடை சாதனையைப் புரிய இவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 13 மணி நேரம் 4 நிமிடங்கள் மட்டுமே. சாங்கி பகுதி, மத்திய வர்த்தக வட்டாரம், துவாஸ் பகுதி, வீடமைப்புப் பேட்டைகள் ஆகிய இடங்களைச் சாலை விதிமுறைகளைப் பின்பற்றியவாறு கடந்துவந்து இந்த சாதனையைப் புரிந்தனர்.

இதற்காக இவர்கள் ஆண்டு தொடக்கத்திலிருந்தே ஒன்றாகப் பயிற்சி செய்து வந்தனர். பயிற்சிக்காக வாரத்தில் இருமுறையாவது சந்தித்துக் கொண்டனர். அப்போது ஒவ்வொருவரும் சுமார் 50 கி.மீ. தூரத்திற்கு நடந்து பயிற்சி செய்வர்.

இப்படி பயிற்சி செய்வது இவர்களது வாழ்க்கைமுறையில் ஊறிவிட்ட ஒன்று.

"எங்கள் குழுவில் ஆக மூத்தவர் 68 வயது திரு ரா.தனபால். அவர் இளம் வயதில் எங்களுக்கு பயிற்றுவிப்பாளராக இருந்தவர். இன்றுவரை அவரை நாங்கள் பயிற்றுவிப்பாளர் என்றுதான் அழைக்கிறோம். அவருடன் இந்த சாதனையை நிகழ்த்தியதில் பெருமிதம் கொள்கிறேன்," என்று தெரிவித்தார் குழுவில் இடம்பெறும் திரு ரா.சுப்பிரமணியம், 57.

இந்தக் குழுச் சாதனையைத் தவிர்த்து, தனிஆளாக திரு சுப்பிரமணியம் 10 நாட்களில் ஆக அதிக தூரம் நடந்திருக்கும் (501,370 அடிகள்) சாதனையையும் சிங்கப்பூரில் ஆக தொலைவான தூரத்திற்கு (103.6 கி.மீ.) நடந்துள்ள சாதனையையும் நிகழ்த்தி இவ்வாண்டு சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

"ஈராண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவில் 'ஸ்கைடைவிங்' என்ற வான்சாகச விளையாட்டில் நான் ஈடுபட்டேன். வயது எதற்குமே ஒரு தடையில்லை, எதை செய்ய நினைக்கிறோமோ அதைத் துணிந்து செய்யலாம்," என்றார் குழுவில் இடம்பெறும் மற்றொரு நடை வீரரான 64 வயது திரு த.ஜெயகுமார்.

தங்கள் பிள்ளைகள் பெரியவர்கள் ஆகிவிட்ட நிலையில், முதுமைக் காலத்தில் தங்களுக்கு விருப்பான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குக் கூடுதல் நேரம் கிடைப்பதாக இவர் கூறுகிறார்.

"இவர்கள் இச்சாதனையைப் புரிய எடுத்துக்கொண்ட நேரம் பிரம்மிக்கவைக்கிறது. ஏனெனில் இவர்களின் வயதைக் கருத்தில்கொள்ளும்போது ஒருவர் சராசரியாக 3 மணி நேரத்திற்கும் குறைவாகத்தான் நடந்திருக்கிறார்," என்று கூறினார் சிங்கப்பூர் சாதனைப் புத்தக அமைப்பின் தலைவர் திரு ஒங் எங் ஹுவாட்.

கொவிட்-19 நிலவரம் மேம்பட்டதும் உள்ளூர், அனைத்துலக நெடுந்தொலைவு நடைப்போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து கலந்துகொண்டு மேன்மேலும் சாதனைகள் புரிய இக்குழுவினர் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உடலில் பலமில்லை, உடற்பயிற்சிகள் செய்ய தெம்பில்லை என வயதை ஒரு காரணமாகக் காட்டி 'முடியாது' என்று கூறுவோருக்கு மத்தியில் அதற்கு விதிவிலக்காய்த் திகழ்பவர்களும் இருக்கின்றனர்.

55 வயதைத் தாண்டிய இந்த ஐந்து விளையாட்டு வீரர்களும் தாங்கள் கற்றுக்கொண்ட மனவலிமையை மறவாமல், உடல்வலிமையைக் கைவிடாமல் பயிற்சி செய்து சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தனர். தங்களின் அனுபவத்தைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொள்கின்றனர்.