சிங்கப்பூரின் முக்கிய தேசிய இலக்கிய விழாவான சிங்கப்பூர் எழுத்தாளர் விழா இந்த ஆண்டு அக்டோபர் 30 முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
சிங்கப்பூர், வெளிநாட்டு படைப்பாளர்களை ஒன்றுகூட்டி ஆங்கிலம், தமிழ், சீனம், மலாய் ஆகிய நான்கு அதிகாரத்துவ மொழிகளுடன் ஏனைய உலக மொழிகளின் இலக்கியங்களையும் கொண்டாடும் இவ்விழா, கொரோனா கிருமிப் பரவல் சூழல் காரணமாக மெய்நிகர் விழாவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
“23வது முறையாக இவ்வாண்டு நடைபெறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா, ஓர் அனைத்துலக, பன்மொழி விழாவாக தொடர்ந்து நடைபெறுவதில் பெருமை கொள்கிறது. சிங்கப்பூரின் நான்கு அதிகாரத்துவ மொழிகளின் படைப்பெழுத்துகளைக் கொண்டாடும் இவ்விழா, உள்நாட்டையும் வெளிநாடுகளையம் சேர்ந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், பங்கேற்பாளர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, பல கலாசாரப் புரிதலை ஏற்படுத்தும் உரையாடல்களை ஊக்குவிக்கிறது,” என்று தேசிய கலைகள் மன்றத்தின் இயக்குநர்களின் (இலக்கியம்) ஒருவரான திருவாட்டி மே டான் குறிப்பிட்டார்.
“இவ்வாண்டு, தமிழ் இலக்கியத்தின் மீது விழா கவனம் செலுத்துகிறது. சிங்கப்பூரில் தமிழிலக்கியம், நம் செறிவான இலக்கியப் பாரம்பரியத்தின் முக்கிய பகுதியாய் இருப்பதுடன் துடிப்புமிக்க அனைத்துலகத் தமிழிலக்கியச் சூழலுக்குத் தொடர்ந்து பங்காற்றிவருகிறது.
“விழா நிகழ்ச்சிகளில் பல நாடுகளையம் துறைகளையும் சார்ந்த பல்வேறு கண்ணோட்டங்களை முன்வைப்பது மிகவும் முக்கியம். அவ்வாறு செய்வது, புதிய சிந்தனைகளையும் தொடர்புகளையும் உருவாக்கவும், கொரிய மொழி, பாஹாசா மினாங், தகலொக், வங்காளமொழி போன்ற நிலம்சார்ந்த மொழியிலக்கியங்களில் இடம்பெறும் மானுட அனுபவங்களில் உள்ள பொதுத்தன்மையை அறிந்துகொள்ளவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது,” என்றார் அவர்.
130க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைக் கொண்ட இவ்விழாவுக்கான விழா அட்டையை https://swf2020-live.sistic.com/ என்ற இணையத்தளத்தில் வாங்கலாம்.
ஓர் நுழைவு அட்டையை எல்லா நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தலாம். கட்டண நிகழ்ச்சிகளுக்கு தனியாக $10.00 நுழைவுச் சீட்டுகளை வாங்க வேண்டும். இலவச நிகழ்ச்சிகளும் உண்டு.
மேல் விவரங்களுக்கு காண்க:
www.singaporewritersfestival.com
அக்டோபர் 30 முதல் நவம்பர் 8 வரையிலான தமிழ் நிகழ்வுகள்
இலக்கிய முன்னோடிகளின் கண்காட்சி:
பி. கிருஷ்ணன், சிங்கை மா. இளங்கண்ணன்,
இராம. கண்ணபிரான்
சிங்கப்பூரின் மூன்று முக்கிய தமிழிலக்கிய ஆளுமைகள் தங்கள் படைப்புகளின் வழி உருவாக்கிய சிங்கப்பூர் இந்திய வாழ்க்கைச் சித்திரிப்புகளை முன்வைக்கும் பன்மொழி மின்னிலக்கக் கண்காட்சி இது.
பண்டைய இலக்கியத்தில் பெண்ணின் சுயம்
விழா அட்டை ($20)
இடம்: சிஸ்டிக் லைஃப் (SISTIC Live)
சுய அதிகாரம் பெற்றவளாகவும் சமூகத்தால் குறுக்கப்பட்டவளாகவும் சங்ககாலப் பெண் சித்திரிக்கப்பட்டிருக்கிறாள். இந்த முரண் பற்றியும் பண்டைய இலக்கியத்தில் பெண்ணின் பார்வை பற்றியும் அமர்வில் பேசப்படும்.
இடர்காலத்து எழுத்தின் சவால்களும் சிக்கல்களும்
விழா அட்டை ($20)
இந்த சஞ்சலமான காலகட்டத்தில் படைப்பெழுத்து அமைதியைத் தரும் தீர்வாக உள்ளதா? அல்லது மன அழுத்தமும் மனத் தளர்வும் படைப்பெழுத்தை முடக்கியுள்ளனவா? எல்லாமே மாறிப்போன இடர்காலத்தில் எழுத்துப்பணி எவ்வாறு தங்களுக்குப் புகலிடமாய் அமைந்தது என்பது பற்றி எழுத்தாளர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.
சித்திரத் தமிழ் (இருமொழி அமர்வு)
இந்நிகழ்ச்சி தமிழிலும் ஆங்கிலத்திலும் நடைபெறும்.
சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் சித்திரப் படைப்புகள் அளிக்கக்கூடிய புதிய திறப்புகள் பற்றியும் இங்கு சித்திரப்பட நாவல் உருவாகும் சாத்தியம் பற்றியும் பேசப்படும்.
இடம்பெயர்தலும் அலைந்து உழல்தலும் உருவாக்கிய தமிழ் இலக்கியம்
நெருக்கடிகளாலும் பொருள் ஈட்டவும் இடம்பெயர்ந்தவர்கள் கிளர்வூட்டும் புதிய தமிழ் இலக்கியத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். பிரிந்த நாட்டுக்கான ஏக்கம், புதிய வாழ்வின் மீதான வேட்கை ஒருசேர அமைந்த இவர்களின் எழுத்துகளால் புதிய நடைமுறைகளும் அனுபவங்களும் கிடைத்துள்ளன. இப்புதிய இலக்கியத் திறப்புகளைப் பற்றி அமர்வில் பேசப்படும்.
மின்னிலக்க உலகத்தில் எழுத்தாளர்களும் வாசகர்களும்
இணையவெளியும் தொழில்நுட்ப வளர்ச்சியும் தமிழ் இலக்கியத்தில் படைப்பாக்கம், ரசனை, நுகர்வு ஆகியவற்றில் பற்பல புதுமையான தளங்களை உருவாக்கியுள்ளது. எழுத்தாளர்-வாசகர் உறவிலான மாற்றம், இணைய அமைப்புகளுக்கான புதிய வாய்ப்புகள் போன்ற சாத்தியங்களில் அமர்வு கவனம் செலுத்துகிறது.