மனநலம் தொடர்பான அம்சங்களை ஆராய்ந்து, அதைப் பல கண்ணோட்டங்களில் அணுகும் மெய்நிகர் கருத்தரங்குக்கு ‘மென்டல் ஆக்ட்’ (Mental ACT) மனநல அமைப்பு அடுத்த மாதம் ஏற்பாடு செய்துள்ளது.
“கிருமித்தொற்று சூழல் நிலவி வரும் இக்காலகட்டத்தில், உயிரை மாய்த்துக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உதவி கேட்டு நமக்குப் பல அழைப்புகள் வருகின்றன. மனநலம் குறித்த பிரச்சினைகளைப் பற்றி தெளிவுப்படுத்தவும், குறிப்பாக இந்திய சமூகத்திற்காகவும், இந்த கருத்தரங்கு ஒரு சிறந்த தளமாக அமையும்,” என்றார் இளையர்களுக்கான சமூக சேவையாளர் திரு த.தேவானந்தன், 28.
அக்டோபர் 10 முதல் 31ஆம் தேதி வரை, நான்கு சனிக்கிழமைகளுக்கு நீடிக்கும் இந்த கருத்தரங்கில் 16 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளையர்கள் கலந்துகொள்ளலாம். நான்கு குழு அமர்வு கலந்துரையாடல்கள், 12 பட்டறைகளிலிருந்து விரும்பியனவற்றைத் தேர்வு செய்து கலந்துகொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
அனைத்து வயதினரும் தகவல் அறிந்துகொள்ளும் வகையில் நான்கு குழு அமர்வுகளின் பதிவுகள் சமூக ஊடங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
இந்திய சமூகத்தைக் கவனத்தில் கொண்ட இக்கருத்தரங்கு யாவரையும் சென்றடையும் நோக்கில் ஆங்கிலத்தில் நடத்தப்படும்.
சமயம், பல தலைமுறைகளின் பேரதிர்ச்சிகள், குடும்ப வன்முறை போன்ற பல தலைப்புகளை ஒட்டி குழு அமர்வுகளின் கலந்துரையாடல்கள் அமையும்.
“யோகாசனம், உடற்பயிற்சி, எழுத்து போன்ற பல உத்திகளைப் பட்டறைகள் பயன்படுத்தும். மனநலத்தைப் பல வழிகளில் அணுகலாம். ஒவ்வொருவரும் தனது தனிப்பட்ட ஆர்வத்துக்கும் விருப்பத்துக்கும் ஏற்றவாறு பட்டறைகளில் ஈடுபடலாம்,” என்றார் திரு தேவானந்தன்.
திரு தேவானந்தனும் 28 வயது மனநல ஆலோசகரான பிரியநிஷாவும் இணைந்து 2017ஆம் ஆண்டில் ‘மென்டல் ஆக்ட்’ அமைப்பைத் தோற்றுவித்தனர். 24 மணி நேரமும் அவசர அழைப்புகளை ஏற்கும் சேவை, ஆலோசனைகள் வழங்குவது, மனநல விழிப்புணர்வை அதிகரிக்கும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது போன்ற நடவடிக்கைகளை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. தேசிய இளையர் மன்றத்தின் ‘யங் சேஞ்மேக்கர்ஸ்’ (Young ChangeMakers) நிதியின் ஆதரவில் நடத்தப்படும் கருத்தரங்குக்கு அனுமதி இலவசம்.