நட்பின் சிறப்பு, கருணையின் பெருமை, காதலின் அழகு, பழி உணர்ச்சியின் உச்சக்கட்டம் என திருப்பங்கள் நிரம்பிய கதைதான் வில்லியம் ஷேக்ஸ்பியரின் ‘தி மெர்சென்ட் அஃப் வெனிஸ்’.
இதை ‘வெனிஸ் வணிகன்’ என்ற தமிழ் மேடை நாடகமாக அரங்கேற்றவிருக்கின்றனர் அவாண்ட் நாடகக் குழுவினர்.
கொவிட்-19 கிருமி முறியடிப்பு முயற்சிகள் தொடங்கியதிலிருந்து கலைப் படைப்புகளை அரங்குகளில் மக்கள் நேரடியாகச் சென்று பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு இருந்தது. இதனை அடுத்து தேசிய கலைகள் மன்றம் செப்டம்பர் 11 ஆம் தேதியிலிருந்து சிறிய அளவிலான நேரடி நிகழ்ச்சிகள் அரங்கேற அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் அவாண்ட் நாடகக் குழுவின் ‘வெனிஸ் வணிகன்’ நாடகம் அக்டோபர் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தேசிய நூலக வாரிய நாடக நிலையத்தில் மேடையேறவுள்ளது.
முழுநீள நாடகமாக படைக்கப்படவிருந்த இந்த நாடகத்தைச் சுருக்கி அமைத்துள்ளார் நாடக இயக்குனர் திரு க. செல்வா.
இதற்குத் தமிழாக்கத்தை இயற்றியவர் திருமதி உமையாள் திரு. இவரின் வசனங்களுக்கு 12 நடிகர்கள் உயிர்கொடுத்துள்ளனர்.
ஆக்ரோஷம், கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழும் காரசாரமான விவாதம், நகைச்சுவை, காதல் காட்சிகள் எனக் குறைந்த அளவு தமிழ்ப் புலமை உள்ளவர்கள்கூட ரசிக்கும் விதத்தில் நாடகம் அமைந்துள்ளது.
‘வெனிஸ் வணிகன்’ நாடகத்தை அவாண்ட் நாடகக் குழு, சென்ற ஆண்டு மேடை வசன படைப்பாக படைத்திருந்தது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒரு மாறுபட்ட பரிமாணத்தில் நாடகக் குழு நாடகத்தைப் படைக்கப்படவுள்ளது.
நுழைவுச்சீட்டுகளுக்கு www.sistic.com.sg/events/venice1020 இணையப்பக்கத்தை நாடவும்.