ப. பாலசுப்பிரமணியம்
தந்தையைப் போலவே தாமும் சொந்த தொழில் நடத்தி அதில் வெற்றி காண வேண்டும் என்று முடிவெடுத்தார் திரு ர.ஆனந்தா ஷருராஜா. 1983ஆம் ஆண்டில் உடல் ஆரோக்கியத் துறை சார்ந்த தன் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
வாரத்தின் ஆறு நாட்களை அலுவலகப் பணிகளுக்கே ஒதுக்கினார். அதுவே அவரது நீடித்த வாழ்க்கைமுறை ஆனது. வேலையிலிருந்து நீண்டகால விடுப்புகூட எடுத்தது இல்லை.
ஒருநாள், அலுவலகத்திலிருந்து புறப்பட்டு தம் வாகனத்தின் ஓட்டுநர் இருக்கையில் அமர முயன்றபோது வலது காலை அவரால் நகர்த்த முடியவில்லை. அதுவரையில், இதை அவர் அனுபவித்ததில்லை. ஏன் வலது கால் செயலிழந்து போனது என்ற குழப்பம் அவருக்கு. தம் அலுவலக ஊழியர் ஒருவரிடம் திறன்பேசி வழி தகவல் தெரிவித்த அவர், பின்னர் சுயநினைவின்றி வாகனத்தில் கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டு, மூன்று நாட்களாக கண்விழிக்கவில்லை. பின்னர் சுயநினைவு வந்ததும் தம்மைப் பக்கவாதம் தாக்கியுள்ளதை அறிந்துகொண்டார். உலகமே தலைகீழானது, மனம் நொந்துபோனது.
“பக்கவாதம் தாக்கும் வரை அதைப் பற்றி சிந்தித்ததே இல்லை. வேலையிலேயே மூழ்கியிருந்ததால், அறிகுறிகளைக் கவனிக்காமல் விட்டுவிட்டேன்,” என எட்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை வருத்தத்துடன் நினைவுகூர்ந்தார் திரு ஆனந்தா.
பக்கவாதம் அவரின் 55வது வயதில் தாக்கிய பின்னர், அவரின் நடமாட்டமும் பேச்சும் பாதிக்கப்பட்டன. தமக்கு இருந்த உயர் ரத்த அழுத்தத்தைக் கண்காணிக்காமல் போனதே இதற்கு வித்திட்டது. பக்கவாதம் ஏற்படுவதற்கு முன், வேலையிடத்தில் சுமார் ஆறு மாதங்களாக மனஉளைச்சலுடன் செயல்பட்டதாகவும் தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே உறங்கியதாகவும் திரு ஆனந்தா குறிப்பிட்டார். இச்சம்பவம் திரு ஆனந்தாவையும் அவரின் குடும்பத்தாரையும் உலுக்கியபோதும் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கை வைத்திருந்தனர்.
முதல்படியாக அவரின் பேச்சு மீண்டும் வழக்கநிலைக்கு வருவதில் கவனம் செலுத்தப்பட்டது. பேச்சுப் பயிற்சிகளின் உதவியுடன் மூன்று மாதங்களுக்குள் குறைந்தது 100 சொற்களை அவரால் கூற முடிந்தது.
மருத்துவமனையில் நடமாட்டத்திற்கு உதவும் அசைவுப் பயிற்சிகளுக்கும் திரு ஆனந்தா சென்றார். வீட்டிலும் சில உடற்பயிற்சிகளில் அவர் ஈடுபட்டார். மீண்டு வருவோம் என்ற தன்னம்பிக்கையும் பொறுமையும் படிப்படியாக அவரின் உடல் தேறி வர வழிவகுத்தது.
இன்று அவரின் பேச்சுத் திறன் ஓரளவுக்கு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டது. அவரால் மெல்ல மெல்ல நடக்க முடிகிறது, நடைப்பயிற்சி, யோகாசனம், உடற்பயிற்சி ஆகியவற்றில் அவர் ஈடுபட்டு வருகிறார். உடற்பிடிப்பு நிபுணரின் சேவையும் அவருக்கு உதவி வருகிறது.
ஆரோக்கியமற்ற கொழுப்பு நிறைந்த கடை உணவை அதிகம் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர் காய்கறிகள், பழங்கள், ‘நட்ஸ்’, ‘சீட்ஸ்’ ஆகியன உள்ளடங்கிய உணவுவகைகளை இப்போது சாப்பிடுகிறார். அரிசிக்குப் பதிலாக பெரும்பாலும் ‘கீனுவா’ (Quinoa) வகையை உட்கொள்கிறார். எட்டு மணி நேரத்தை உறக்கத்திற்காகவே ஒதுக்குகிறார். வேலையிடத்தில் முன்புபோல் அதிக நேரம் இருப்பதில்லை. கிடைக்கும் ஓய்வு நேரத்தை உடல்நலம் பேணுவதில் செலவழிக்கிறார். உதவியின்றித் தாமாக, இயல்பாக நடப்பதைத் தமது அடுத்த இலக்காகக் கொண்டுள்ளார் திரு ஆனந்தா.
“மனஉளைச்சலால் உடலில் ஏற்படும் அறிகுறிகளைக் கண்காணிக்காமல் விட்டுவிடாதீர்கள். பக்கவாதம் வருவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், குளிரான அறையில் எனக்கு வியர்த்துக் கொட்டியதை என் மனைவி பார்த்திருக்கிறார். ஒருவேளை, அப்போதே ஒரு மருத்துவரை பார்த்திருந்தால் இந்நிலையைத் தவிர்த்திருக்கலாம்,” எனக் கூறினார் 63 வயது திரு ஆனந்தா.
பக்கவாதம் திடீரென்று தாக்கியதில் தாம் உயிரிழந்திருக்கக்கூடும் என்று கூறிய திரு ஆனந்தா, பக்கவாதத்திற்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்ப்பது அவசியம் என்றார்.
வேலையிடத்தில் ஏற்படும் மனஉளைச்சல் குறித்து மெத்தனமாக இருந்துவிட வேண்டாம் என்றும் இளம் வயதினரையும் பக்கவாதம் தாக்குகிறது என்றும் அவர் சுட்டினார். பக்கவாதத்தால் பாதிப்படைந்தவர்கள் வழக்கநிலைக்குத் திரும்ப சிங்கப்பூர் தேசிய பக்கவாதச் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருகிறது. இது குறித்து அவர் அறிய வந்து, 2015ஆம் ஆண்டிலிருந்து அவற்றில் பங்கேற்கவும் முற்பட்டார். இன்று சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இடம்பெற்று, பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் பக்கவாதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
“என் தந்தை எளிதில் மனந்தளர்ந்திடமாட்டார். போராடும் குணம் படைத்தவர். அவரைப் போலவே நானும் இருந்து, என் மனைவி, பிள்ளைகளுக்காக இதிலிருந்து மீண்டுவர வேண்டும் என்று உறுதிகொண்டேன். நீண்டகாலம் ஆனாலும் வாழ்க்கை வழக்கத்திற்குத் திரும்பும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளேன். பக்கவாதத்திற்கு ஆளானவர்கள் நம்பிக்கையை ஒருபோதும் கைவிட்டுவிடக்கூடாது,” என்று அறிவுறுத்தினார் திரு ஆனந்தா.