திருவண்ணாமலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வினை கிருமிப்பரவல் சூழலால் பலர் நேரில் காண முடியாத பட்சத்தில் நேரலைச் சேவை ஒன்றின்வழியாக அதனைக் காண்பதற்கு தியானக் குழு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது.
இந்து சமயத்தில் பெரும் முக்கியத்தும் பெறும் இந்தப் புனித நிகழ்வுக்காக ‘மூலவர்க பரம்பரா’ (MULAVARGA PARAMPARA) அமைப்பினர், நிகழ்வின் நேரலைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சிவபெருமானின் ஆறாவது முகமாக ‘அதோமுகத்தை’ப் பிரதிபலிக்கும் இறுதி தீபம் திருவண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்படும் நிகழ்வாக இது உள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8.25 மணிக்கு தீபம் ஏற்றப்படுவதை இந்த நேரலை காணொளியில் நீங்கள் ‘மூலவர்க பரம்பரா’ பேஸ்புக் மற்றும் யூடியுப் பக்கங்களிலும் மலேசியாவின் ‘ஏஷ்ட்ரோ’ ஒளிவழியிலும் காணலாம். சடங்குகளின் ஒளிபரப்புக்குப் பின்னர் இரவு 8.45 மணிக்கு ஆன்மிக போதகர் சத்குரு ஸ்ரீ அன்பே அருணாசலானந்தா ஒரு மணி நேர தியான வகுப்பை இந்த நேரலை சேவையில் இலவசமாக நடத்துகிறார்.
கிருமிப்பரவல் சூழலில் நேர்மறை எண்ணங்களையும் நம்பிக்கையையும் வளர்ப்பது இந்த ஏற்பாட்டின் நோக்கம் என்று கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக இயங்கும் இந்த அமைப்பின் தொண்டர்களில் ஒருவரான ஸ்ரீ ஈஸ்வர் தெரிவித்தார். “பயணக் கட்டுப்பாட்டு சூழலிலும் மக்கள் தீப தரிசனம் பெற்று நிம்மதி அடைந்து கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடவேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும்,” என்றார் திரு ஈஸ்வர்.