பலருக்கும் சென்ற ஆண்டு சவால்மிக்க ஒரு காலகட்டமாக அமைந்துவிட்டது. கிருமி முறியடிப்பு நடவடிக்கைகள் ஒரு புறம் இருக்க, ஒரு சிலருக்குத் தங்களின் உறவுகளைப் பிரிந்திருக்க வேண்டிய சூழல்கூட ஏற்பட்டது.
இருப்பினும், அன்பிற்குரியவர்களைப் பிரிந்திருப்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியும் என்று ஷபிர் தபாரே ஆலம், தம் ‘தனிமை’ பாடல் வழி உணர்த்தியுள்ளார்.
பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என்ற பல பரிமாணங்களில் வலம் வரும் ஷபிர், கிருமி காரணமாக நாடே முடங்கிப் போயிருந்த காலகட்டத்தில் நான்கு பாடல்களுக்கு உருவம் தந்தார். அவற்றில் ஒரே காதல் பாடல், இந்த ‘தனிமை’.
பிரிய நேரிட்ட காதலர்களின் ஏக்கத்தைச் சொல்கிறது இப்பாடல். பாடலை ஷபிர் பாடியிருப்பதுடன் அதற்கு இசையும் அமைத்துள்ளார். இப்பாடலின் காணொளியை யுடியூப் தளம் வழியாக கிட்டத்தட்ட 400,000 பேர் இதுவரை பார்வையிட்டுள்ளனர்.