கொவிட்-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக முதன்முதலில் கடந்தாண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டபோது நாடே நடுங்கிப் போனது.
கிருமியால் பாதிக்கப்பட்டவர் யாரையெல்லாம் சந்தித்தார், எங்கெல்லாம் சென்றார் போன்ற விவரங்களைச் சேகரிப்பதற்காக தொடர்புகளின் தடமறியும் (Contact tracing) அதிகாரிகள் களத்தில் இறக்கப்பட்டனர்.
கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இவர்களின் பங்கு மிக இன்றியமையாதது. கொவிட்-19 கிருமி தொற்றியவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை உடனே கண்டறிந்து அவர்களுக்கு 14 நாட்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுவதை இவர்கள் உறுதி செய்பவர்கள்.
இதற்கு முன் விமானத் துறையில் இருந்த 39 வயது நரசிம்மன், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் பணியில் ஈடுபடத் தொடங்கினார்.
கிருமி தொற்றியவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், சக பணியாளர்கள் போன்றவர்களுடன் தொடர்புகொண்டு அவர்களிடம் தொலைபேசி வழி தகவல் பெறுவது அவரின் வேலை.
கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் ஒரு சில மாதங்களில் உச்சத்தில் இருந்தபோது நாளுக்குச் சுமார் 100 பேருடன் திரு நரசிம்மன் போன்ற அதிகாரிகள் தொடர்புகொள்ள வேண்டியதாக இருந்தது.
“ஒரே விவகாரத்தைப் பற்றி இரு வேறு நபர்களிடம் கேட்கும்போது, அவர்களிடமிருந்து மாறுபட்ட பதில்கள் வரும். அதனால் உண்மையான தகவலை உறுதிசெய்வதற்கு மேலும் சிலருடன் தொடர்புகொள்ள வேண்டியதாக இருக்கும்,” என்று பணியின் ஆரம்பக்கட்ட சவால்களைப் பற்றி பகிர்ந்துகொண்டார் திரு நரசிம்மன்.
‘டிரேஸ்டுகெதர்’ பயன்பாடும் ‘சேஃப்எண்ட்ரி’ வருகைப் பதிவு முறையும் அறிமுகமான பிறகு அதிகாரிகளின் வேலைப் பளு கணிசமான அளவு குறைந்தது.
ஒருவர் குறிப்பிட்ட ஓர் இடத்தில் எத்தனை மணிக்கு இருந்தார் என்ற தகவலை உடனுக்குடன் பெறும் வசதியை இவை ஏற்படுத்தித் தந்தன.
ஏற்கெனவே திரட்டப்பட்ட தகவல் இருந்ததால், அத்தகவலை உறுதிசெய்வதற்கு மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ள வேண்டியதாக இருந்தது.
முன்பு தொடர்புகளின் தடங்களைக் கண்டறிவதற்கு அதிகாரிகள் சராசரியாக நான்கு நாட்கள் வரை எடுத்துக்கொண்டனர்.
இந்த மின்னிலக்கத் தீர்வுகளால் தடங்களைக் கண்டறிவதற்கு இவர்களுக்கு இரண்டு நாட்கள்கூட ஆவதில்லை.
வாரத்தில் நான்கு நாட்களுக்கு 12 மணி நேர வேலை பார்க்கும் திரு நரசிம்மன், சக பணியாளர்களுடன் ஓர் அணுக்கமான உறவைக் கொண்டிருப்பதாகக் கூறினார். தொடர்புகளின் தடமறியும் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறையும்போது தமது பணி மூலம் சக சிங்கப்பூரர்களுக்கு உதவ முடிவதில் பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பான சூழலை நிலைநாட்டுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என்று கூறி ஓர் உதாரணத்தைப் பகிர்ந்துகொண்டார்.
உணவங்காடி நிலையத்திற்குச் சாப்பிடுவதற்காக ஓர் முதிய தம்பதியர் சென்றிருந்தனர். கணவர் ‘டிரேஸ்டுகெதர்’ செயலியைப் பயன்படுத்துபவர் என்றாலும் அவரின் மனைவி பயன்படுத்துவதில்லை.
அதன் பின்னர் கொவிட்-19 கிருமி தொற்றியவரின் அருகே இருந்ததால் அந்த கணவருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக இருந்தது.
திரு நரசிம்மன் மேலும் விசாரித்ததில் அம்முதியவர் அவரின் மனைவியுடன்தான் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு உணவு உண்ணச் சென்றிருந்தார் என்ற புதிய தகவல் கிடைத்தது.
அப்படி இருவருமே ‘டிரேஸ்டுகெதர்’ செயலியைப் பயன்படுத்தாமல் போயிருந்தால், அவர்கள் கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் அதிகரித்திருக்கலாம்.
தற்போது தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் குழுவை வழிநடத்தும் திரு நரசிம்மன், “தயவுசெய்து டிரேஸ்டுகெதர் செயலியையும் சேஃப்எண்ட்ரி பதிவு முறையையும் பயன்படுத்துங்கள். அது உங்களையும் உங்களுக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்,” என்று அறிவுறுத்தினார்.