63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் அருளிய ‘திருவிரட்டை மணிமாலை’ தொகுப்பில் 20 பாடல்கள் உள்ளன. இறைவனை நேராகக் கண்டு பாடப்பட்ட இத்திருமுறைப் பாடல்கள் தெய்வீகம் நிறைந்தவை. இம்மாதம் 4ஆம் தேதி, வியாழக்கிழமையன்று ஸ்ரீ தெண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் இந்த 20 பாடல்களை இசைவட்டாக ‘கலாமஞ்சரி’ எனும் தமிழிசைப் பரப்பு மன்றம் வெளியிட்டது.
கலாமஞ்சரியின் நிறுவனர் திருமதி சௌந்தரநாயகி வயிரவன் இப்பாடல்களைப் பாடியுள்ளார். இப்பாடல்களுக்கு திருமதி கௌரி கோகுல் கர்நாடக ராகங்களை அடிப்படையாகக் கொண்டு இசைவடிவம் கொடுத்திருக்கிறார். மிருதங்கத்தில் திரு எஸ் தேவராஜனும் வயலினில் திரு வெ சிவகுமாரனும் இணைந்துள்ளனர்.
இசைவட்டில் உள்ள 20 பாடல்களில், ஐந்து பாடல்களுக்குச் சென்னையைச் சேர்ந்த செல்வி சுருதி உமையாள் அபிநயம் பிடித்துள்ளார். அம்மையார் வாழ்ந்த இடங்களான காரைக்கால், திருவாலங்காடு, குலசேகரப்பட்டினம் போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று காணொளி எடுத்து அவை இசைவட்டில் வரும் பாடல்களின் பின்னணியில் இடம்பெற்றுள்ளன.
டெப்போ ரோடு ஸ்ரீ ருத்ரகாளியம்மன் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் விக்கிரகம் ஒன்று உள்ளது. அக்கோவிலிலும் பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டு அவையும் இசைவட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராகக் கலந்துகொண்டு காரைக்கால் அம்மையார் அருளிய பாடல்களில் உள்ள சிறப்பம்சங்களை தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் அழகாக எடுத்துக் கூறிய திரு வெங்கட்ராமன், இசைவட்டிலும் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக விவரித்துள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு தகவல், தொடர்பு மற்றும் சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இசைவட்டை வெளியிட்டார்.
இசைவட்டு வெளியீட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற தொகையிலிருந்து 50% ‘கிளப் 2 கேர்’ (Club 2 care) அறநிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. மனநல ஆரோக்கியத்தைப் பேணுவதில் இந்த அறநிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
டாக்டர் ஜனில் தமது உரையில், “பழமையானப் படைப்புகளான கவிதைகள், இலக்கியங்களைப் படைப்பதற்கு கடினமான உழைப்பும் முயற்சியும் தேவை. இப்படிப்பட்ட பாராட்டிற்குரிய படைப்புகளை நமது இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று கூறினார்.