அமரர் மு. தங்கராசன் அவர்களுக்குச் சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று, மாலை ஆறு மணிக்கு இணையம் வழி நினைவேந்தல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கூட்டம் உமறுப்புலவர் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைமையில் நடைபெற்றது.
திரு. பொன் சுந்தரராசு அவர்கள் கூட்டத்தை நன்முறையில் நெறிப்படுத்தி நடத்தும் பொறுப்பை ஏற்றிருந்தார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் சமூகத் தலைவர்கள், கவிஞர்கள், தமிழாசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பேராசிரியர் வீரமணி, அமரர் மு. தங்கராசன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
கூட்டத்தில் பல்வேறு தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் ஆசிரியர்களும் முன்னாள் மாணவர்களும் மு. தங்கராசன் பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். அத்துடன் தமிழுக்கு அவர் ஆற்றியுள்ள அளப்பரிய சேவைகள் குறித்தும் பாராட்டிப் பேசினர்.
இக்கூட்டத்தில் மு. தங்கராசனின் 'நாட்டுப்புறத்தில்' என்னும் நூல் வெளியீடும் நடைபெற்றது. நூலை அச்சிடும் பொறுப்பை ஏற்றிருந்த திரு ஜோதிநாதன், நூல் உருவாக்கப்பணியின் நூலாசிரியரோடு பணியாற்றிய அனுபவத்தைச் சுவைபடப் பகிர்ந்துகொண்டார். அந்நூல் குறித்துத் தமிழறிஞர் சுப. திண்ணப்பன் அவர்கள் அறிமுகஉரை நிகழ்த்தினார்.
புனிதமரம் ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலய நிர்வாகக்குழுவின் தலைவர் திரு. நாராயணசாமி நூலை வெளியிட்டார்.
மோன்டிசோரி நிறுவனக் குழுவின் தலைவர் முனைவர் சந்துரு முதல் நூலைப் பெற்றுக்கொண்டார். இணையத்தின் வழியே இந்நூலின் சிறப்புகள் குறித்து காந்திகிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஓ. முத்தையா அவர்கள் உரையாற்றினார்.