ப. பாலசுப்பிரமணியம்
விருந்தோம்பல் தொழில்துறையின் தலைசிறந்த சேவையாளர்கள், இம்மாதம் நடந்தேறிய 2020ஆம் ஆண்டு தேசிய கனிவன்பு தங்க விருது நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டனர். சிங்கப்பூர் கனிவன்பு இயக்கமும் சிங்கப்பூர் ஹோட்டல் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த வருடாந்திர விருது நிகழ்ச்சியில் மொத்தம் 127 விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்ற இருவரை தமிழ் முரசு நேர்கண்டது.
ஐந்து ஆண்டுகளாக தளவாடத் துறையில் பணியாற்றிவிட்டு ஹோட்டல் துறையில் நான்கு ஆண்டுகளுக்கு முன் கால் பதித்தார் திரு மு.பன்னீர்குமார். பரபரப்பான வேலைச் சூழலில் இடம்பெற வேண்டும் என்று 'ரமடா பை வயிண்டம் சிங்கப்பூர் எட் ஜொங்ஷான் பார்க்' ஹோட்டலில் 'பெல்மேன்' பணியில் சேர்ந்தார்.
ஹோட்டலுக்கு வரும் விருந்தினர்களின் பயணப் பெட்டிகளைக் கையாள்வதும் அவர்கள் ஹோட்டலிலிருந்து வெளியே செல்வதாக இருந்தால் அதற்கான ஏற்பாடுகள் செய்வதும் இவரது பணியாகும். சுற்றுப்பயணிகளிடம் உரையாடுவதில் இன்பம் காணும் பன்னீர்குமார், பிறரின் தேவைகளை அறிந்து, தம்மால் இயன்ற உதவியைப் புரியும் குணம் படைத்தவர்.
சிங்கப்பூரில் எத்தகைய வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று நீண்டகாலமாக ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் திரு பன்னீர்குமாரிடம் கேட்க, அவரை மெக்ரிட்சி நீர்த்தேக்கப் பூங்காவிற்கு தமது ஓய்வு நாளில் தாமே அழைத்துச் சென்றாராம் திரு பன்னீர்குமார்.
"அடிக்கடி அந்த ஹோட்டல் வருகையாளரைச் சந்தித்து பேசியதில் எங்களிடையே நட்புறவு மலர்ந்தது. அதனால் என் ஓய்வு நாளில் அழைத்துச் சென்றது எனக்கு இன்பமே," என்று கூறினார் 30 வயது திரு பன்னீர்குமார்.
கடந்தாண்டு தாயகத்திற்குத் திரும்பிய விருந்தினர்களிடம் இதற்குமுன் பயன்படுத்தப்பட்ட பயணப் பெட்டிகளை இலவசமாக வழங்கி, அவர்கள் பொருட்களைப் பத்திரமாக விமான நிலையத்திற்குக் கொண்டு செல்ல உதவினார்.
விமான நிலையத்தில் காணாமல் போன பயணப் பெட்டிகள், டாக்சி வாகனத்தில் விட்டுச் சென்ற திறன்பேசிகள் போன்றவற்றை ஹோட்டல் வருகையாளர்களுக்கு மீட்டுத் தரவும் உதவும் இந்தச் சேவையாளர், சாதாரண ஊழியர்கள் பிரிவில் தேசிய கனிவன்பு தங்க விருதை வென்றார்.
மூத்த 'பெல்மேன்'னாக பணியாற்றும் திரு மு.பன்னீர்குமார் எதிர்காலத்தில் துறை சார்ந்த சான்றிதழுக்குப் பயின்று, ஹோட்டலின் வரவேற்புப் பிரிவில் பணியாற்ற ஆசைப்படுகிறார்.
வரவேற்புப் பிரிவு தமது வேலைக்கான இடம் இல்லை என்றாலும் அங்கு சென்று அவ்வப்போது உதவுவது திருமதி சி.ஆட்ரிக்கு வழக்கம். தற்போது அண்டாஸ் ஹோட்டலின் உணவு பானப் பிரிவு செயல்பாட்டு பயிற்சி நிர்வாகியாக பணியாற்றும் இவர், ஹோட்டல் துறையில் 22 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் கொண்டவர்.
கிராண்ட் ஹயட் ஹோட்டலில் தம் பணியைத் தொடங்கிய திருமதி ஆட்ரி, ஹயட் ஹோட்டல்கள் குழுமத்தில் இடம்பெறும் அண்டாஸ் ஹோட்டல் உணவு பானப் பிரிவின் செயல்பாட்டுப் பணியில் 2017ஆம் ஆண்டில் அமர்த்தப்பட்டார்.
இந்த 47 வயது நிர்வாகி ஹோட்டலின் உணவு பானப் பிரிவு சுமுகமாகச் செயல்படுவதை உறுதிசெய்யும் அதே வேளையில் விருந்தினர்களுக்கு ஹோட்டலைச் சுற்றிக் காட்டவும் வரவுவேற்புப் பிரிவில் சக ஊழியர்களுக்கு விருந்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் உதவுவார்.
ஒருமுறை, சீன மூதாட்டி ஒருவர் காலை உணவுக்காக ஹோட்டல் உணவகத்திற்கு வந்திருந்தார். அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. திருமதி ஆட்ரி அவரது கையைப் பிடித்து, உணவு வகைகளைப் பொறுமையுடன் பார்வையிடச் செய்து, கேட்டதை வழங்கினார்.
திருப்தியுடன் உண்ட அம்முதியவர், திருமதி ஆட்ரியை கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தாராம். ஹோட்டல் வரவேற்பு இடத்தில், தங்களின் துறுதுறு குழந்தைகளைப் பெற்றோர்கள் சமாளிக்க போராட, பழங்கள் அல்லது சித்திரம் வரையும் காகிதங்களைப் பிள்ளைகளுக்குக் கொடுத்து பெற்றோர்கள் ஓய்வெடுக்க வகைசெய்வாராம் இவர். ஒருவரின் உடல், முகபாவம் கொண்டு, அவர்களது தேவைகளை உணரும் திறன் பல்லாண்டு கால சேவையில் இவருக்கு உருவானது.
"சிறந்த சேவை வழங்குவது தொடர்பில் கற்றுக்கொடுக்கலாம் ஆனால் கனிவன்பு என்பது உள்ளத்திலிருந்து வர வேண்டும். பிறரோடு இயல்பாக பழகும் குணமும் பொறுமையும் சேரும்போது, இத்துறை ஒருவருக்கு ஏற்றதாக விளங்கும்," என்று கூறினார் இளம் ஊழியர்களுக்குப் பயிற்சி வழங்கிவரும் இந்த அனுபவசாலி.
திருமதி ஆட்ரிக்கு, நிர்வாகி பிரிவில் தேசிய கனிவன்பு தங்க விருது வழங்கப்பட்டது.
கொவிட்-19 சூழலிலும் உயர்தர சேவை வழங்க ஹோட்டல் துறை கடப்பாடு கொண்டுள்ளது என்பதற்கு இவ்விருவரும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளனர்.

