எஸ்.வெங்கடேஷ்வரன்
கிருமிப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு நடைமுறையில் இருந்தபோது நேரடி வகுப்புகளும் பயிற்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
அப்போது சிங்கப்பூர் சிறைச் சேவைக்கான அதிகாரிகளை உருவாக்கும் மூத்த பயிற்றுவிப்பாளர் துணை சூப்பரிண்டன்டண்ட் வேணு ஆர்ஷ், ஆக்கபூர்வமான தீர்வுகளை உருவாக்கினார்.
அவரிடம் பயிற்சி பெற்றவர்களை உடலளவிலும் மனதளவிலும் வலுவாக வைத்திருந்தார்.
கடந்த ஆண்டுக்கான உள்துறைக் குழுவின் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருது திரு வேணுவுக்கு வழங்கப்பட்டது.
வீட்டிலிருந்தபடியே 'ஸூம்' வழி தினமும் ஒரு மணி நேரத்திற்குப் பயிற்சி வகுப்புகள் நடத்தினார் 41 வயது திரு வேணு.
பயிற்சி பெறுபவர்கள், தங்களின் கருத்துகளைப் பயிற்றுவிப்பாளர்களுடன் தனிப்பட்ட முறையில் பகிர்ந்துகொள்வதற்காக 'பென்ஜூ' (Penzu) என்ற மின்னிலக்கக் குறிப்பேட்டு தளம் ஒன்றையும் அவர் பயன்படுத்தினார்.
நேரடிப் பயிற்சிகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மறுபடியும் தொடங்கியதால், குறுகிய காலத்திற்குள் பயிற்சி வழங்க வேண்டிய சூழலில் இருந்தனர் பயிற்றுவிப்பாளர்கள்.
அந்நேரத்தில் உடல் வலிமையைக் கூட்டும் பயிற்சிகளில் சிறைச் சேவைக்குத் தேவையான செயலாற்றல்களையும் உள்ளடக்கிய ஒரு புதிய பயிற்சி முறையை திரு வேணு மற்ற பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து உருவாக்கினார்.
இம்மாதம் 11ஆம் தேதியன்று உள்துறைக் குழு பயிற்சிக்கழகத்தில் இப்புதிய பயிற்சி முறையைச் செய்தியாளர்களிடம் காட்டி அதைப் பற்றி பேசினார் திரு வேணு.
"தாக்குதல் அல்லது சண்டை ஏற்படும் சூழ்நிலையில் அதிகாரிக்குச் சில நொடிகள் என்ன செய்வதென்று தெரியாமல் போகலாம். ஆனால் அந்த சில நொடிகளில் நடக்கக்கூடியவை பல. இவ்வாறு உடல் உறைந்து போகும் நேரத்தில் கையாளக்கூடிய மதிநுட்ப உத்திகளைத் தங்களின் நேரடிப் பயிற்சிகளில் சேர்க்கலாம்," என்றார் சிங்கப்பூர் சிறைச் சேவையில் 20 ஆண்டு கால அனுபவமுள்ள திரு வேணு.
கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இந்தப் பயிற்சி திட்டம், அதிகாரபூர்வமாக நவம்பர் மாதம் நடப்புக்கு வந்தது.
தற்போது நேரடி முறையில் மட்டும் நடத்தப்படும் இந்த பயிற்சி முறை மூலம் இதுவரை 66 பேர் பயனடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த ஆண்டின் சிறந்த இணை பயிற்றுவிப்பாளர் விருதை மேஜர் கண்ணன் செல்வராஜ் பெற்றார்.
பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவில் (DART) 'ரோட்டா' தளபதியாக பணியாற்றும் அவர், அபாயகரமான பல சூழல்களைச் சந்தித்துள்ளார்.
"துவாஸ் பகுதியில் ஏற்பட்ட தீச்சம்பவம் ஒன்றில் என் குழுவுடன் மீட்புப் பணி மேற்கொள்ள வேண்டியிருந்தது. பின்னிரவு இரண்டு மணி முதல் காலை ஒன்பது மணி வரை ஓயாமல் தொடர்ந்து வெப்பத்திலும் புகைமூட்டத்திலும் தீயை அணைக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழலில் மனதளவில் வலிமை இருப்பது அவசியம்," என்றார் திரு கண்ணன், 39.
சாலை விபத்துகள், உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள், தொழிற்சாலை விபத்துகள், ஆழத்தில் நெருப்பு மூண்டு அணைக்கச் சவாலாக உள்ள தீச்சம்பவங்கள் போன்ற பலதரப்பட்ட சூழல்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார் திரு கண்ணன்.
'லயன் ஹார்ட்' செயல்பாட்டுப் படைப்பிரிவின் (Operation Lion Heart Contingent) தளபதியாக வெளிநாட்டு மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார் கண்ணன். 2018ஆம் ஆண்டில் லாவோசில் அணை ஒன்று இடிந்து விழுந்தபோது 14 நாட்களுக்கு அங்கு தேடி, மீட்கும் பணிகளில் உதவினார் அவர்.
வெள்ளத்தில் வீடு இழந்தோருக்குத் தற்காலிக முகாம்களை அமைத்தும் கொடுத்தார். தமக்கு ஏற்பட்ட இதுபோன்ற அனுபவங்களைப் பயிற்சி வகுப்புகளின்போது பகிர்ந்துகொண்டு வருகிறார் திரு கண்ணன்.
"உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் பயிற்சிகள் வழங்கியுள்ளேன். நாம் வகுப்பில் எவ்வளவுதான் பயிற்சி வழங்கினாலும் சம்பவம் நிகழும்போது வழக்கத்திற்கு மாறான பலவும் நடக்கலாம். அதற்கு மனதளவில் தயார்ப்படுத்திக்கொள்ள எனது அனுபவங்களைக் கூறுகிறேன்," என்றார் அவர்.
குடிமைத் தற்காப்புப் பயிற்சிக் கழகத்தில் நேரடிப் பயிற்சி வசதிகளை உருமாற்றும் திட்டப் பணிக்குழுக்களில் ஓர் உறுப்பினராகவும் இவர் இருக்கிறார்.
அதுபோக 'டார்ட்' குழுவில் சேரும் பங்கேற்பாளர்கள், மேலும் பாதுகாப்பாக, பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வாய்ப்புகளை அதிகப்படுத்தும் வகையில் குடிமைத் தற்காப்புப் பயிற்சிக் கழகத்துடன் சேர்ந்து புதிய திட்டம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார் கண்ணன்.
கொள்ளைநோய் சிக்கலால் உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த 1,500 பயிற்றுவிப்பாளர்கள் அவர்களின் பயிற்சிகளை மாற்றியமைக்க வேண்டியிருந்தது. பயிற்சித் திட்டங்களைச் சிறப்பாக மாற்றியமைத்த பயிற்றுவிப்பாளர்களுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பது தனிப்பட்ட விருதுகளையும் ஐந்து குழு விருதுகளையும் உள்துறைக் குழு பயிற்சிக்கழகம் வழங்கியது.