சிங்கப்பூர் தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமல்லாது உலகளவில் தமிழ்ப்பணி ஆற்றி வரும் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களுக்கு, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் 2020ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் மொழியியல் அறிஞர் விருதை வழங்கியுள்ளது.
இதற்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் சிங்கப்பூரில் செயல்படும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவும் இணைந்து 'போற்றுவோம் கொண்டாடுவோம்' என்ற இணைய நிகழ்ச்சியை மார்ச் 21ஆம் தேதியன்று நடத்தின.
தமிழ்த்தாய் வணக்கம், வரவேற்புரை ஆகியவற்றைத் தொடர்ந்து முனைவர் சுப. திண்ணப்பன் ஆற்றிய சாதனைகளைப் பற்றிய காணொளித் தொகுப்பு ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து, முனைவர் திண்ணப்பன் பற்றி 'விருது வரும் தேடி விரைந்தொளிவார் ஓடி' என்ற தலைப்பில் கவிதை வாசித்தார் அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவின் தலைவர் திரு அ.கி வரதராஜன்.
விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சிங்கப்பூர் முன்னாள் நியமன நாடாளு மன்ற உறுப்பினரான முனைவர் இரா. தினகரன், சிறப்புரை ஆற்றினார். நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழும் சுப. திண்ணப்பன் அவர்கள் தமிழுக்கும், தமிழ்ச் சமூகத்துக்கும் ஆற்றிய பணிகளையும் சாதனைகளையும் தொண்டுகளையும் எடுத்துரைத்தார்.
மேலும், சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் திரு எஸ். ஆர். நாதன் அவர்களுக்குத் தமிழ் ஆசானாக இருந்து பயிற்றுவித்தது, தமிழர் அல்லாத 500க்கும் மேற்பட்டவர்களை தமிழில் பேச வைத்தது ஆகிய பெருமைகள் முனைவர் திண்ணப்பன் அவர்களையே சாரும் என்றும் குறிப்பிட்டார்.
சுப. திண்ணப்பன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கமும் அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழுவும் இணைந்து பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தனர். அடுத்து சுப.திண்ணப்பன் அவர்கள் ஏற்புரை வழங்கியதுடன் இப்பாராட்டு விழாவுக்கு நன்றி தெரிவித்தார்.
படிப்படியாகத் தாம் கற்ற மொழியியல் அறிவே தமது பல முயற்சிகளுக்கு அடித்தளமாக அமைந்ததாக நினைவு கூர்ந்தார் அவர்.
தமிழ் சார்ந்த பல சிங்கப்பூர் அமைப்புகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் இணைய நிகழ்வில் கலந்துகொண்டனர்.

