'வானமே எல்லை!' மகளிர் கொண்டாட்ட நிகழ்ச்சி
சிங்கப்பூர் அரசாங்கம் 2021ஆம் ஆண்டை மகளிரைக் கொண்டாடும் ஆண்டாக அறிவித்துள்ளதை ஒட்டி, பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக சிங்கப்பூரில் செயல்படும் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் சங்கம், மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக "வானமே எல்லை" என்ற நிகழ்ச்சியை மார்ச் 28ஆம் தேதி இணைய வாயிலாக நடத்தியது.
சமுதாய மேம்பாட்டில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மனித வாழ்வியலை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றிச் செல்வதில் பெண்கள் பெரும் சக்தியாகத் திகழ்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
சாதிக்கத் துடிக்கும் பெண்களின் மனதில் மேலும் ஊக்கத்தைத் தூண்டும் வண்ணம் தன்முனைப்புப் பேச்சாளர் திருமதி சரோஜினி பத்மநாதன் சிறப்புரை ஆற்றினார்.
கடந்த 36 ஆண்டுகளாக சிங்கப்பூர் பொதுத்துறையில் பல்வேறு தலைமைத்துவப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவத்துடனும் பெண்கள் மற்றும் குடும்பம் போன்ற தலைப்புகளில் பல பயிலரங்குகளை நடத்திய நிபுணத்துவத்துடனும் திருமதி சரோஜினி பத்மநாதன், தன்னம்பிக்கைதான் பெண்களின் வளர்ச்சிக்கான மூலதனம் என்ற உட்கருத்துடன் பெண்கள் மேம்பாட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
பெண்கள் மேன்மேலும் வளர்ந்து வெற்றிபெற 'HHH' (Head + Heart + Hand) என்ற உத்திமுறையைக் கற்பித்தார்.
இதன்வழி அவர் கூறியது, பெண்களின் உயர்வுக்கு அவர்களின் சிந்தனைகள் தெளிவாகவும் புதுமையாகவும் சிறந்த திட்டமிடுதலும் வேண்டும், பெண்களின் சீரிய சிந்தனைகளை அவர்கள் முழுமனதுடனும், மனவலிமையுடன் அனைத்து செயல்களையும் கடின உழைப்பின் மூலம் வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே இதன் விளக்கம்.
'உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது; என்ன இந்த வாழ்க்கை என்று ஒருபோதும் எண்ணம் தோன்றக்கூடாது' என்ற வரிகளை மேற்கோள் காட்டி, பலவித எடுத்துக்காட்டுகளுடன் பல பரிமாணங்களைத் தொட்டுப் பேசிய அவர், தமது சிறு வயதில் தன்னம்பிக்கையுடன் தாம் மேற்கொண்ட கடல்வழிப் பயணத்தைப் பற்றி விளக்கிக் கூறி அனைவரது மனதிலும் தன்னம்பிக்கையை நிறைத்து தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும், திருமதி விஜி ஜெகதீஷ் 'வணிகம் மற்றும் தொழில்முனைவு' என்ற தலைப்பிலும் முனைவர் கண்ணாத்தாள் நடராஜன் 'கல்வியின் சிறப்பு' என்ற தலைப்பிலும் திருமதி மஹாலட்சுமி வெங்கட்ராமன் 'பெற்றோரும் பிள்ளை வளர்ப்பும்' என்ற தலைப்பிலும் திருமதி அலமேலு ஐங்கரன் 'சமூக சேவை' என்ற தலைப்பிலும் தங்களது சொந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு அனைவரது மனதிலும் நம்பிக்கையை விதைத்தனர்.
இன்றைய அதிநவீன, அதிவேக உலகத்தில் பெண்கள் மனஉறுதியுடனும் மனஆற்றலுடனும் உந்துதல்மிக்க வெற்றிப் பயணத்தை அமைத்துக்கொள்ள பாதை காட்டிய "வானமே எல்லை" நிகழ்ச்சி முற்றிலும் பெண்களே வழிநடத்திய பெண்களுக்கான நிகழ்ச்சி.