கி. ஜனார்த்தனன்
காலத்தின் சவால்களுக்குத் தீர்வுகள் ஆராயவேண்டும், அவற்றை இளையர்களிடம் சென்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 'தமிழ்ச்சூழலில் சுற்றுச்சூழல்' என்ற உரை நிகழ்ச்சிக்கு சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக்கல்லூரி வரையிலான நிலைகளைச் சேர்ந்த ஆறு படைப்பாளர்கள் 'ஸூம்' இணைய நேரடி காணொளித்தளத்தில் இயற்கை மற்றும் சுற்றுப்புறப் பாதுகாப்பு ஒட்டிய தலைப்புகளில் பேசினர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த இந்த மெய்நிகர் நிகழ்ச்சியில் அப்ராஸ், மகேஷ்குமார் ரஷ்மிதா, சிங்காரவேலு ரஞ்சனி, நந்தினி அழகப்பன், அனிதா சுகந்தராஜ், வை.நர்த்தனநிலா ஆகிய மாணவர்களுடன் முனைவர் ஜெ. சுந்தரமூர்த்தி உரையாற்றினார்.
புராதன தமிழ் இலக்கியங்களிலிருந்து மாணவர்கள் மேற்கோள் காட்டித் தத்தம் தலைப்புகளை ஆராய்ந்தனர். நெகிழிப் பையின் தீமைகளைப் பற்றி உரையாற்றிய தொடக்கநிலை ஐந்து மாணவர் அப்ராஸ், நெகிழி தயாரிப்பு மற்றும் குப்பை போடுவதால் ஏற்படும் சுற்றுப்புறக் கேடு பற்றி விளக்கியதுடன் முடிந்தவரை நெகிழிப் பையின் பயன்பாட்டைக் குறைப்பது எப்படி என்பதையும் கூறினார்.
உலக வெப்பமயமாதல் பற்றி பேசிய தொடக்கநிலை ஐந்து மாணவி மகேஷ்குமார் ரஷ்மிதா, இதற்குப் பெரும் காரணமாக இருக்கும் கரியமில வாயுவைப் பற்றியும் அதைக் குறைப்பது எப்படி என்பதையும் விளக்கினார்.
தண்ணீர் சேமிப்பு தொடர்பில் மாணவர் ரஞ்சனி, சில வழிமுறைகளைப் பட்டியலிட்டார்.
மாணவிகள் அனிதா சுகந்தராஜ் மற்றும் வை.நர்த்தனநிலா, திருக்குறள், வள்ளலார் பாடல்கள் போன்றவற்றை மேற்கோள் காட்டி இயற்கையைப் பற்றிய உணர்வு தமிழ் இலக்கியத்துடன் பின்னிப் பிணைந்திருப்பதைச் சுட்டினர்.
தமிழ் இலக்கியச் சான்றுகளைப் பற்றி பார்வையாளர்களுக்கு மேலும் உணர்த்தும் வகையில் சிறப்புப் பேச்சாளரும் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சுற்றுப்புற, நீர் தொழில்நுட்பத் துறையின் மூத்த ஆய்வாளருமான சுந்தரமூர்த்தி ஜெயராமன் பேசினார். நாட்டின் வளர்ச்சிக்குச் சுற்றுப்புறப் பாதுகாப்பின் பங்கு இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார்.
வாழையிலையில் உணவு உண்பதாலும் தண்ணீர் பருகச் செப்புக் குவளையைப் பயன்படுத்துவதாலும் ஏற்படும் நன்மைகளை விளக்கினார். இயற்கையைப் பற்றிய கலந்துரையாடல் தமிழில் மிகப் பழமையானது என வளர்தமிழ் இயக்கத்தின் ஆலோசகர் திரு ஆர். ராஜாராம் தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் நேரடி காணொளித்தளம் வழி பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை நடத்திய முயற்சியையும் அவர் பாராட்டினார்.