ப. பாலசுப்பிரமணியம்
திரு ரா. சுப்பிரமணியத்துக்கு வேலைக்குச் செல்லும் வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.
58 வயது ஆகியுள்ள நிலையில் தமது ஓய்வுகாலத்தை ஏற்கெனவே அவர் திட்டமிட்டுவிட்டார்.
ஆனால் அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருப்பதை அவரது அன்றாட நடவடிக்கைகள் புலப்
படுத்துகின்றன.
தமது விருப்பதற்கு இணங்க சாதனைகளைப் புரிந்து வருகிறார் சொத்து முகவரான திரு சுப்பிரமணியம். கடந்த ஆண்டு 10 நாட்களில் ஆக அதிக தூரம் நடந்திருக்கும் (501,370 அடிகள்) சாதனையையும் சிங்கப்பூரில் ஆக அதிகமாக 103.6 கிலோ மீட்டர் நடந்துள்ள சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அதோடு சக நண்பர்களுடன் இணைந்து குழுவில் ஐவராக 100 கிலோ மீட்டர் தூரம் நடந்து சாதனை புரிந்துள்ளார்.
திரு சுப்பிரமணியத்தின் இந்தச் சாதனைகள் சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.
அண்மைய காலமாகவே திரு சுப்பிரமணியம் அனைத்துலக நெடுந்தொலைவு நடைப் போட்டிகளில் சிங்கப்பூரைப் பிரதி
நிதித்து பதக்கங்களை வென்றுள்ளார். தற்போதைய கொவிட்-19 கிருமித்தொற்று சூழலைக் கருதி அனைத்துலக போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,
உடலுறுதியை நிலைநாட்டும் வகையில் தொடர்ந்து புதிய இலக்குகளை எட்டும் இவரது கடப்பாடு பிரமிக்க வைக்கிறது.
அந்த வரிசையில், இம்மாதம் 8ஆம், 9ஆம் தேதிகளில் அவர் தொடர்ச்சியாக 12 மணி நேரத்துக்கு 84.05 கிலோ மீட்டர் தூரம் நடந்தார். 12 மணி நேரத்தில் ஆக அதிகமான கிலோமீட்டர் நடந்த வீரர் எனும் பெருமை திரு சுப்பிரமணியத்தைச் சேரும்.
"நெடுந்தொலைவு நடையில் ஈடுபடுவதற்கு மனதை திடமாக வைத்துக்கொள்வது அவசியம், அது சவால்மிக்கது.
"பிறரை அஞ்சிடச் செய்யும் தூரத்தை கடப்பதில்தான் எனக்கு விருப்பம்," என்றார் திரு சுப்பிரமணியம்.
நெடுந்தொலைவு நடை என்றால் அது சுப்பிரமணியம்தான் என்று சொல்லும் அளவுக்கு, 30 நாட்களில் 1.5 மில்லியன் அடிகள் நடந்து மீண்டும் இம்மாதம் மற்றொரு சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். 1.5 மில்லியன் அடிகள் சுமார் 1,200 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சமம்.
இந்தச் சாதனையைப் படைக்க அவர் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு தினமும் சராசரியாக 40 கிலோ மீட்டர் நடை பயிற்சியில் ஈடுபட்டார். இது நாளுக்கு ஒரு நெடுந்தொலைவு நடைப் போட்டி யில் பங்கெடுப்பதற்கு ஈடாகும்.
"இளம் வயதில் திரு சுப்பிரமணியம் ஒரு முன்னணி நடைப் போட்டி வீரராக திகழ்ந்தவர். கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் அனைத்துலக நடைப் போட்டிகளில் பங்குபெற்று பதக்கங்களை வென்றுள்ளார்.
"இவ்வயதில் அவர் தொடர்ந்து சாதனை புரிவதை குறித்து பெருமிதம் கொள்கிறோம்," என்றார் சிங்கப்பூர் சாதனை புத்தகத்தின் தலைவர் திரு ஒங் எங் ஹுவாட்.