இந்து இளங்கோவன்
2019ஆம் ஆண்டு இயற்கை எய்திய பிரபல உள்ளூர் நடிகரும் இசைக்கலைஞருமான ‘வேட்டை’ நாடக புகழ் திரு ரிஷிகுமார், இறப்பதற்கு முன் பாடிய இறுதி பாடல் இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்னையர் தினத்தன்று வெளியிடப்பட்டது.
‘நீ இல்லாமல்’ என்ற இந்தத் தமிழ்ப் பாடலை இயற்றி அந்த இசைக் காணொளியைத் தயாரித்தவர் கார்த்திக் சுந்தரமூர்த்தி ராஜன். இவர் தயாரித்து வெளியிட்ட முதல் பாடல் இது. மறைந்த திரு ரிஷிகுமாருடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி நினைவு கூர்ந்த கார்த்திக், “ அவர் இரவு ஒரு மணி வரை எங்களுடன் பொறுமையாக இருந்து சிறப்பாக பாடித் தந்தது மட்டுமல்லாமல் பின்னணி பாடல் பாடிய எனக்கும் கற்றுத்தந்தார். அது மறக்கமுடியாத ஓர் அனுபவமாக இருந்தது,” என்றார்.
சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளாகப் பல இளைஞர்கள் கலைத் துறையில் ஆர்வம் காட்டி ஈடுபட்டு வருகின்றனர். குழுவாக இணைந்து பாடல்கள் தயாரித்து வெளியிடுவது, குறும்படங்கள் தயாரிப்பது, நாடகங்களை மேடையேற்றுவது எனத் தங்களது திறன்களை அவர்கள் வெளிப்படுத்துகின்றனர். அந்த வரிசையில் ‘நீ இல்லாமல்’ பாடலுக்குப் பின்னாலும் இளையர் கூட்டம் உள்ளது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் இளம் உள்ளூர் இசையமைப்பாளர் சத்தியா. பாடல் வரிகளை கார்த்திக்குடன் இணைந்து எழுதியது ராகதீபன். பாடல் காணொளிக்கான படப்பிடிப்பு சிங்கப்பூரிலும் மலேசியாவில் நடந்தன.
இந்தப் பாடலின் பின்னணியில் உள்ள பொருள் குறித்து கார்த்திக் விளக்கம் தந்தார். அவரது குழந்தைப் பருவ நினைவுகளும் தாயைப் பிறந்து வாழ்ந்த அனுபவமும் இந்தப் படைப்பை உருவாக்கத் தூண்டியதாகக் கூறினார்.
“சிலர், அம்மா இல்லாமல் இருக்கலாம், சிலர் தங்களது அம்மாவிடமிருந்து பிரிந்து வாழ்ந்துக்ொண்டிருக்கலாம், சிலருக்கு தனது அம்மா யார் என்று தெரியாமல் இருக்கக்கூடும். ஆனால் இவர்கள் அனைவரின் வாழ்க்கையில் சந்திக்கும் ஏக்கத்தைத்தான் இப்பாடல் வழி வெளிப்படுத்த முயன்றுள்ளோம். நான் எனது பாலர் பருவத்தில் வீட்டைவிட்டு வெளியேறி சிறுவர் இல்லத்தில் வளர்ந்தேன். இப்பாடல் வரிகளின் வழி தாயன்புக்கான ஏக்கத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன்.” என்றார் கார்த்திக்.
'நீ இல்லாமல்ல்' பாடல் யூடியூப் காணொளித் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.