ஜனார்த்தனன் கிருஷ்ணசாமி
ஆதரவில்லாமல் வாழும் முதியவர்களைக் கண்காணிப்பதில் அக்கம்பக்கத்தினர் முடிந்தவரை அக்கறை காட்ட வேண்டும் என்று கூறுகிறார் 'பிரம்' நிலையத்தின் சமூக நட்புறவுத் திட்டத் தொண்டூழியர் லோகாம்பிகை சடாச்சரம், 63.
ஆதரவு தேவைப்படுவோர், குறிப்பாக இந்தியர்கள், உதவி நாடத் தயங்குவதாகக் குறிப்பிட்ட திருவாட்டி லோகாம்பிகை, பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணத்தை விட்டொழித்து வழங்கப்படும் உதவியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
தற்போதைய கொவிட்-19 கிருமிச் சூழலின்போது முதியோர் பலர் வீட்டில் முடங்கியிருப்பதால் இவர்களின் பிரச்சினைகள் வெளிப்படையாகத் தெரிவதில்லை. எனவே, திருவாட்டி லோகாம்பிகை போன்ற சமூக ஊழியர்களின் மூலம் முதியவர்களின் தேவை என்ன என்பது கண்டறியப்படுகிறது.
மார்ச் மாதத்தில் மோசமான வீட்டுச் சூழலில் எந்த ஒரு பராமரிப்புமின்றி வாழும் மூதாட்டி ஒருவரைப் பற்றி அண்டைவீட்டார் தகவல் அளித்ததன் மூலம் தமக்குத் தெரிய வந்ததாக கூறினார். மூன்று பிள்ளைகளுக்குத் தாயான திருவாட்டி லோகாம்பிகை, அவ்வப்போது அந்த மூதாட்டியைச் சென்று பார்ப்பார். மூதாட்டி தோற்றத்தில் வாட்டத்துடன் இருப்பதையும் அவரது கால்கள் வீங்கி இருப்பதையும் திருவாட்டி லோகாம்பிகை கண்டதாகக் குறிப்பிட்டார்.
கடந்த மாத பிற்பாதியில் திருவாட்டி லோகாம்பிகை மீண்டும் அந்த மூதாட்டியின் வீட்டுக்குச் சென்றபோது மனிதக் கழிவிற்கிடையே கட்டில் மீது அந்த மூதாட்டி போதிய தண்ணீரின்றி கிடந்தார்.
"மருத்துவ வண்டியில் செல்ல அவர் மறுத்தபோதும் உதவி வழங்க ஒருவர் வந்திருக்கிறார் என்ற நிம்மதி உணர்வு அவர் முகத்தில் தெரிந்தது," என்று அவர் கூறினார்.
முதியோரின் தேவைகள் பல என்பதால் மற்ற அமைப்புகளின் துணையுடன் அவர்களது பிரச்சினைகளைத் தீர்க்க முற்படுவதாக திருவாட்டி லோகாம்பிகை கூறினார்.
"துன்புறுத்தல் போன்ற பிரச்சினைகள் தொடர்பில் போலிசாரின் துணை தேவைப்படுகிறது. ஆனால் போலிசாரின் தலையீட்டைச் சிலர் விரும்பாததால் அவர்களுக்கு உதவுவதிலும் பிரச்சினை ஏற்படுகிறது. அவதிப்படும் முதியோரில் பலர் முழுமனதுடன் தீர்வுகளை நாடிச்செல்வதில்லை," என்று அவர் கூறினார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் முட்டுக்கட்டையாக இருப்பது பயம் என்பதால் மனதிற்கு அமைதி அளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட முதியோரை ஊக்குவிக்கிறார். தாதியராக முன்பு பணியாற்றிய இவர், அந்த அனுபவம் தமக்குப் பெரிதும் கைகொடுத்திருப்பதாக தெரிவித்தார்.
"வசதி குறைந்த நோயாளிகள் உதவி நாடுவதில் தயக்கம் காட்டுவதை நான் என் தாதியர் பணியில் பார்த்திருக்கிறேன். தற்போதைய சூழலில் அந்த அனுபவம் உதவுகிறது," என்று கூறினார்.
"மனதிற்கான பயிற்சி (mindfulness) முதியோருக்குப் நற்பலனை அளித்துவருவதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன். நானே இந்தப் பயிற்சியை மேற்கொண்டு அமைதி பெறுகிறேன்," என்று கூறினார் திருவாட்டி லோகாம்பிகை.
இப்பயிற்சியை தமிழில் நடத்துவோருக்கான தேவை அதிகம் இருப்பதாகக் கூறிய அவர், தமிழ் பேசும் தொண்டூழியர்கள் இதனைக் கற்பிக்க முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.