'பற்றுக பற்றற்றான் பற்றினை' என்று வள்ளுவ பெருந்தகை கூறிச் சென்ற வாக்கினை இன்றைய சூழலில் பொருத்தி, தமிழ் படைப்பொன்றை உருவாக்கி படைத்தும் காட்டினர் 'சிங்போரிமோ தமிழ் ஓபன் மைக்' (SingPoWriMo Tamil Open Mic) 2021 களத்தில் இறங்கிய ஆறு படைப்பாளர்கள்.
தேசிய நூலக வாரியத்தின் இளம் எழுத்தாளர் வட்டம் பெருமையுடன் வழங்கிய 'சிங்போரிமோ' தமிழ் 'ஓபன் மைக்' 2021 நிகழ்ச்சி, மே 15ஆம் தேதியன்று வட்டத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் முழு காணொளியாக வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சி இளம் எழுத்தாளர் வட்டத்தின் 'சிங்போரிமோ' தமிழ் எனும் தமிழ்மொழி விழாவை முன்னிட்டு ஃபேஸ்புக் வழி நடத்தப்பட்ட ஒரு மாத கவிதைச் சவாலை நிறைவுசெய்யும் வகையில் அமைந்தது. கவிதை சவாலுக்கும் இந்த 'ஓபன் மைக்' நிகழ்விற்கும் வளர்தமிழ் இயக்கமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் ஆதரவு வழங்கின.
'பற்று' எனும் கருப்பொருளைக் கொண்ட நிகழ்வு, பலதரப்பட்ட பங்கேற்பாளர்களை ஈர்த்தது. "நாம் வர்த்தகமொழியில் பேசும்போது அறிவைத் தூண்டுகிறோம், ஆனால் தாய்மொழியில் பேசும்போது ஒருவரது மனதைத் தொடுகிறோம்," என்று தனது மொழிப்பற்றை வெளிப்படுத்தினார் பங்கேற்பாளர் திருமதி இசக்கி செல்வி. இத்தகைய பற்றை மழலை மொழியில் கேட்பதற்கு எப்படி இருந்திருக்கும் என்பதை உணர்த்தினார், நிகழ்ச்சியின் ஆக இளைய படைப்பாளர் சுரேஷ் நிவோசன், 11.
கவியரங்காகத் தொடங்கிய யோசனை, கவிதை, உரைநடை படைப்புகள், பாடல்கள், அனுபவப் கதைகள், கலந்துரையாடல்கள், சிந்தனைத் துளிகள் என ஒரு கதம்ப நிகழ்வாக வெளிவந்துள்ளது. இதில் இசை, இலக்கியக் கூறுகளை நிகழ்ச்சி நெறியாளர்கள் ரேவதி மனோகரனும் மிருதுளா குமாரும் இணைத்து வழங்கினர். தமிழ்மொழி வாழும் மொழியாகத் திகழ்வதைத் வலியுறுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி நடந்தேறியது. நிகழ்ச்சியின் காணொளியை யூடியூப்பிலும் காணலாம்.

