சமூக விழிப்புணர்வைத் தூண்டும் தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தும் நோக்கத்தில் கேலாங் மேற்கு சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
அந்த வரிசையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் ஒன்றை மெய்நிகர் பாணியில் இம்மாதம் 23ஆம் தேதியன்று ஏற்பாடு செய்திருந்தது. 100க்கும் மேற்பட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர். தொடர்பு, தகவல் அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான திருமதி ஜோசஃபின் டியோ சிறப்பு விருந்தினராக அதில் கலந்துகொண்டார்.
தாய்மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தி 16வது ஆண்டாக இப்பட்டிமன்றத்தைத் தொடர்ந்து நடத்திவரும் செயலவையைப் பாராட்டியதுடன் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை சமூகத்திற்கு வழங்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
இன்றைய இளையர்களிடம் தாய்மொழிப் புழக்கம் குறைவதற்குக் காரணம் சமூகச் சூழலா, குடும்பச் சூழலா என்ற பட்டிமன்றத்தை முனைவர் இரத்தின வேங்கடேசன் நடுவராக வழிநடத்தினார். திருமதி ஸ்வர்ணலதா ஆவுடையப்பன், திரு அர்ஷத், குமாரி வைஷ்ணவி கண்ணன், திரு முஹம்மது பிலால், திரு சுப்பு அடைக்கலவன், குமாரி சிநேஹா முரளி ஆகியோர் ஒட்டியும் வெட்டியும் பேசினர். இளையரிடையே தாய்மொழிப் புழக்கம் குறைவதற்குக் குடும்பச் சூழலே காரணம் என்று நடுவர் தீர்ப்பு வழங்கினார்.
செய்தி, படம்: கேலாங் மேற்கு சமூக
மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு

