ஆடத் தெரியாது என்றாலும் மகள் கேட்பதால் டிக்டாக் காணொளிகள் உருவாக்கத் தயாராகிறார் இந்த தந்தை. கடந்த ஆண்டு கிருமித்தொற்று பலரையும் வீட்டிலேயே முடங்கவைத்தபோது மகள் துளசி (29), தந்தை சேதுராமனுடன் (59) இணைந்து டிக்டாக் காணொளிகளைத் தயாரிக்கத் தொடங்கினார். நான்கு மில்லியன் 'லைக்ஸ்', 228,000 'ஃபாலோவர்ஸ்' என இந்த அப்பா-மகள் ஜோடி பதிவேற்றம் செய்யும் காணொளிகளுக்கு டிக்டாக் ரசிகர் பட்டாளமே இருக்கிறது. குறிப்பாக, அப்பா திரு சேதுராமனின் குழந்தைத்தனமான நடனமும் துடிப்பான இயல்பும் பலரையும் கவர்ந்துள்ளது.
பொழுதுபோக்காக தொடங்கிய எங்களது டிக்டாக் முயற்சி, இப்போது குடும்பமாகச் சேர்ந்து செய்யும் ஒரு நடவடிக்கையாகவே எங்களுக்கு மாறிவிட்டது என்கிறார் வரைகலை வடிவமைப்பாளர் துளசி. இவருக்கும் இவர் தந்தைக்குமிடையே உள்ள நெருங்கிய பிணைப்பு, மற்றவரை நெகிழ்வடையச்செய்கிறது.
"நீ என்ன செய்தாலும், அது உனக்கு மகிழ்ச்சியைத் தர வேண்டும்," என்று தந்தை அடிக்கடி தன்னிடம் கூறுவதைப் பெருமையுடன் நினைவுகூர்ந்த துளசி, தம் வாழ்க்கையில் ஒரு முன்மாதிரியாக விளங்குவது அவரது தந்தையே என்றார்.
"அவருக்கு 59 வயது என்றாலும் சிறிதும் தயங்காமல் நான் கேட்டுக்கொண்டதற்காக என்னுடன் நகைச்சுவை, ஆடல் என பலதரப்பட்ட டிக்டாக் காணொளிகளைச் செய்ய முன்வருவார். நான் பாடலுக்கேற்ப எப்படி ஆடுவது என்று கற்றுக்கொடுக்கும்பொழுது முழு கவனத்துடன் அதை உள்வாங்கிக்கொண்டு அதை ஒத்திகையும் செய்து பார்ப்பார். எனக்கு 59 வயதாகும்போது என் தந்தைக்கு இப்போது இருக்கும் துடிப்பில் பாதி இருந்தாலே போதும்," என்று சிரித்துக்கொண்டே கூறிய துளசி, தந்தையர் தினத்துக்காக தன் அப்பாவிற்குச் சமைத்துத் தரப்போவதாக சொன்னார்.
"நான் எனது தனிப்படைப்பைப் பதிவேற்றம் செய்யும் காணொளிகளைவிட என் அப்பாவுடன் இணைந்து செய்யும் காணொளிகளுக்கே பலத்த வரவேற்பு கிடைக்கிறது. இந்த வயதில் அவர் காட்டும் உற்சாகமும் விறுவிறுப்பும் பலரை ஈர்த்திருக்கிறது. அவரின் பிறந்தநாளுக்குக்கூட ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் வந்து குவிந்தன," என்றார் துளசி.
இந்த டிக்டாக் புகழைப் பற்றி தந்தை சேதுராமன் என்ன நினைக்கிறார் என்று துளசியிடம் கேட்டதற்கு, "அதைப் பற்றியெல்லாம் அப்பா அதிகம் யோசிப்பதில்லை. புகழைவிட இதனால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்ற காரணத்திற்காகத்தான் என்னுடன் இணைந்து காணொளிகளைச் செய்கிறார்," என்றார்.
தந்தையர் தினத்தை முன்னிட்டு இந்த தந்தை-மகள் டிக்டாக் ஜோடி, ஒரு சிறப்பு காணொளியை வெளியிட்டுள்ளனர். இந்தக் காணொளியை தமிழ் முரசின் சமூக ஊடகத் தளங்களில் கண்டுகளிக்கலாம்.
செய்தி: இந்து இளங்கோவன்