இர்ஷாத் முஹம்மது
இனவாதத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பாதுகாப்பான தளங்கள் தேவை என்றும் அவை பொது வெளியாக இல்லாமல் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட இடமாக அவை இருப்பதை அவர்கள் முக்கியமாகக் கருதுவார்கள் என்று கூறினார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியரான சமூகவியலாளர் முனைவர் லாவண்யா கதிரவேலு.
கொள்கை ஆய்வுக் கழகமும் எஸ் ராஜரத்தினம் அனைத்துலகக் ஆய்வுக் கழகமும் இணைந்து நேற்று முன்தினம் இனம், இனவாதம் குறித்து ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தக் கருத்துகளை அவர் பகிர்ந்தார்.
இனவாதத்தால் பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள திறந்தவெளிகள் பொருத்தமானவையா அல்லது குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட தளங்கள் பொருத்தமானவையா என்பது பற்றி கலந்துரையாடலில் பேசப்பட்டது.
அந்தப் பாதுகாப்பான இடங்கள் ஒரே கருத்தைக் கொண்டோரை எதிர்க்கருத்து கொண்ட பிரிவு களாகப் பிரிப்பது போல தோன்றினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதில் இடம் உண்டு என்று நம்பு வதாகக் கூறினார் முனைவர் லாவண்யா.
"தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து அவற்றை கேட்பவர்கள் அதுபற்றி அறிய வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் விரும்புவார்கள். மனதளவில் அது ஆறுதல் பெற வழிவகுக்கும். ஒருவரின் அனுபவத்தை அங்கீகரிக்கும் சமூகத்தைத் தேடிக் கொள்வது அத்தியாவசியம்," என்றார் அவர்.
"அதனால் அந்தத் தளங்கள் சிலருக்கு மட்டுமே உரித்தானவை என்றோ அவரவர் குழுக்களாகச் சேர்ந்துகொள்ளும் இடங்கள் என்றோ தட்டிக் கழிக்கக் கூடாது என்றும் அவை திறந்த வெளியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும் கூறக்கூடாது. இரண்டு விதத் திலும் அத்தளங்கள் அமைந்திருக்க வேண்டும்," என்று முனைவர் லாவண்யா வலியுறுத்தினார்.
இணையம் வழி பலர் கலந்துகொண்ட கலந்துரையாடலின் முதல் பகுதியில் நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் உரையாற்றியதுடன் கலந்துரையாடலிலும் பங்கேற்றார்.
எஸ் ராஜரத்தினம் அனைத்துலகக் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த முனைவர் சஷி ஜயகுமார் அந்த கலந்துரையாடலை வழிநடத்தினார்.
அதையடுத்து இடம்பெற்ற நிபுணர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் (என்யுஎஸ்) சமூகவியல் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் டேனியல் கோ, என்யுஎஸ் தொடர்பு, புதிய ஊடகத் துறை இணைத் தலைவர் இணைப் பேராசிரியர் எல்மி நிக்மத், லியான்ஹ சாவ்பாவ் சீன நாளிதழின் ஆசிரியர் கோ ஷின் டெக் ஆகியோர் முனைவர் லாவண்யாவுடன் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் போலின் ஸ்ட்ராகன் அந்த அங்கத்தை வழிநடத்தினார்.
பாதுகாப்புத் தளங்கள் சமூக ஊடகங்களைத் தாண்டியவையாக இருக்க வேண்டும் என்றும் அனைவரையும் உள்ளடக்கிய நேரடிச் சூழலில் மக்கள் பங்குபெறும் இடங் களாக அவை இருக்க வேண்டும் என்றும் கருத்துரைத்தார் இணைப் பேராசிரியர் எல்மி.
முதியோரின் கண்ணோட்டங்கள் சமூக ஊடகங்களில் போதிய அளவு இடம்பெறாததால் அவர்களை அரவணைக்க இன்னும் அதிகம் செய்யலாம் என்று அவர் கூறினார்.
இனம் பற்றி பேசும் பாதுகாப்புத் தளங்களாகத் தொடங்கப்பட்ட சில இன்ஸ்டகிராம் பக்கங்களைச் சுட்டிக்காட்டிய இணைப் பேராசிரியர் டேனியல் கோ, பின்னர் அவை திறந்த வெளிக்கு மாற்றப்பட்டதைத் துணிச்சலான செயல் என்று வருணித்தார்.
எல்லாரும் பார்க்கும் வண்ணம் கலந்துரையாடல்கள் இடம்பெறச் செய்தது, இனவாதச் செயல்கள் இன்னும் நடந்துவருவதையும் அந்த அனுபவங்கள் மறக்கப்படக் கூடாது என்பதையும் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மையில் நடந்த இனவாதச் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாகக் கூறிய முனைவர் லாவண்யா, அதைக் களைய பள்ளிகளிலிருந்து தொடங்குவது சிறந்தது என்றார்.
உள்ளார்ந்த பாகுபாடு ஒருவருக்கு இருப்பதை அவர் அறியாது இருக்க வாய்ப்புகள் உண்டு.
அதை எதிர்கொள்ளவும் கண்டறியவும் அப்பாகுபாட்டிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது குறித்தும் சிந்திக்கலாம் என்று முனைவர் லாவண்யா பகிர்ந்தார்.
ஒருவரது அன்றாட நடத்தையை மாற்றுவது குறித்து மட்டும் சிந்திக்காமல் கொள்கைமாற்றம் செய்வது குறித்தும் நாம் சிந்தித்தால் அதுவே நமது தனிப்பட்ட சிந்தனையை மாற்ற வழிவகுக்கும் என்ற சமூகவியல் கண்ணோட்டத்தை அவர் முன்வைத்தார்.
இனம் குறித்த பார்வையை மாணவர்கள் சிறு வயது முதலே கற்றால் பின்னர் அது இயல்பாக அமையும் என்று கூறினார் மற்றொரு சமூகவியளாலரான இணைப் பேராசிரியர் கோ.
அதனால் சிறு வயதிலேயே அல்லது பாலர் பள்ளி முதலே இது குறித்து ஏதாவது முயற்சி எடுக்க வேண்டும் என்பது அவரது கருத்து.
முன்னதாகத் தமது உரையில் அரசாங்கம் வகுத்துள்ள கொள்கைகள் கல்லில் செதுக்கப்பட்டவை அல்ல என்றும் அவற்றை காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப மாற்றலாம் என்றும் அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.
பின்னர் நடந்த கலந்துரையாடலின்போது கல்வியில், குறிப்பாக பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யலாம் என்று அவர் சொன்னார்.