ப.பாலசுப்பிரமணியம்
இரத்த புற்றுநோயால் தமது குடும்ப உறுப்பினர் 1983ஆம் ஆண்டில் இறந்தது இன்னும் 60 வயது மூத்த ஸ்தாவ் தாதியரான திரு பெ.ராமநாதனின் நினைவை விட்டு இன்றும் நீங்கவில்லை.
அச்சமயம் தமது குடும்ப உறுப்பினரைக் கவனித்துக்கொண்ட தாதியர்களின் அன்பும் கடமை உணர்வும் ராமநாதனைப் பெரிதும் கவர, அவர் அதே பாதையில் செல்ல முடிவு செய்தார். அப்போது ஊட்ரம் சாலையில் இருந்த முன்னைய தாதிமை பள்ளியில் துணைத் தாதியராகப் பணியை தொடங்கினார் ராமநாதன். அங்கு அவர் சந்தித்த சக தாதி, அவர் வாழ்வில் சரி பாதி ஆனார்.
அந்நாளில் எடுத்த பணி முடிவு இந்நாளில் விருதுக்குக் கைகொடுத் துள்ளது. இவ்வாண்டின் சுகாதார அமைச்சின் தாதியர் தகுதி விருதினை திரு ராமநாதன் பெற்றுள்ளார்.
சிங்கப்பூரின் தனியார், பொது துறை மருத்துவ கட்டமைப்புகளிலிருந்து வரும் மொத்தம் 125 தலைசிறந்த தாதியர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.
பல்லாண்டு கால தாதியர் அனுபவத்தில் சிங்கப்பூர் பொது மருத்துவ மனை, மனநலக் கழகம், அலெக்ஸ்சான்ட்ரா மருத்துவமனை போன்ற இடங்களில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் சேவையாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
தற்போது கூ டெக் புவாட் மருத்துவமனையின் இருதயவியல், மூப்பியல் துறையில் பணியாற்றும் திரு ராமநாதன் அடிக்கடி அவசர சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலைகளைக் கையாள வேண்டியுள்ளது.
அவர் பணியாற்றும் பிரிவில் கடந்தாண்டு இருதய பிரச்சினை களால் அனுமதிக்கப்பட்ட சுமார் 50 வயதுதக்க ஆடவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
மருத்துவக் குழுவினர் அவரை காப்பாற்றினர். அவர் மெல்ல மெல்ல குணமடைந்து பழைய நிலைக்கு திரும்பியதில் திரு ராமநாதனும் அவரது சக தாதியர்களுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.
"அந்நோயாளி மருத்துவமனைப் பராமரிப்பு முடிந்து வீடு திரும்பிய போது என்னை கட்டிப்பிடித்து கை குலுக்கி நன்றி தெரிவித்தார். இத்தகைய பொன்னான தருணங்களே என்னை இத்தனை காலம் இத்துறையில் நீடித்திருக்க உதவின," என்று கூறினார் திரு ராமநாதன்.
தாதிமைத் துறையில் பழுத்த அனுபவம் பெற்றிருக்கும் திரு ராமநாதன் தமது மருத்துவப் பிரிவில் சேரும் மாணவத் தாதியர்களுக்கு பயிற்சி வழங்குவதிலும் மும்முரமாக உள்ளார்.
சிறந்த முறையில் அவர் களுக்கு ஆசானாக இருந்து, தாதிமை நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்ததில், 2019 ஆம் ஆண்டில் தேசிய சுகாதார பரமாரிப்பு குழுமத்தின் கற்பித்தல் உன்னத விருது இவரைச் சென்றடைந்தது.
அவருடைய 31 வயது மகள் அனுசியாவும் தாதிமைத் துறையை தேர்தெடுத்துள்ளதில் திரு ராமநாதனுக்கு மகிழ்ச்சி.
இவ்வாண்டு விருது கிடைத்ததில் பெருமிதம் கொள்ளும் தாதி ராமநாதன், தொடர்ந்து புதிய தாதியர்களுக்கு உற்சாகம் அளித்து இத்துறையில் அவர்கள் நீடித்து பணிசெய்ய தம்மால் முடிந்த முயற்சிகளை எடுக்கக் கடப்பாடு கொண்டுள்ளார்.