ப. பாலசுப்பிரமணியம்
சுமார் 16 ஆண்டுகளுக்கு முன், காலை 6 மணிக்கு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் விளம்பரப் பக்கங்களைப் புரட்டி, விற்பனைக்கு போகும் வீடுகளை அடையாளம் கண்டு, பிற்பகலில் வீடுகளை பார்வையிட சென்ற அனுபவங்களை நினைவுகூர்ந்தார் திருமதி சி.இந்தி ராணி.
'நேட்டலி இந்திரா' என்று அழைக்கப்படும் இந்த 41 வயது சொத்து முகவர் புரோப்நெக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் ஆவார்.
முன்பு, வானொலி விளம்பரச் சேவை, தம் தொடர்பு விவரங்கள் பதிக்கப்பட்ட ஆலய பிளாஸ்டிக் பைகளை விநியோகித்தல், விழாக் கூட்டங்களில் துண்டுப் பிரசுரங்களை வழங்குதல் போன்ற உத்திகளைக் கையாண்டு அவர் தமது சேவையை விளம்பரப்படுத்தினார்.
தற்போதைய மின்னிலக்க உலகம் சொத்து முகவர்களின் செயல்பாடுகளை மாற்றிவிட்டது.
சொத்து வாங்குவோர் இணையத்தில் அவற்றை தேடுகின்றனர். சொத்து முகவர்களும் இணையத்தில் விற்பனை, வாடகைக்கான வீடுகளை விளம்பரம் செய்கின்றனர். அதனால் சொத்து முகவர்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தை இணையத்தில் வலுப்படுத்துவது மேலும் முக்கியமாகிவிட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் கொவிட்-19 கிருமிப் பரவலை முறியடிப்பதற்கான திட்டம் நடப்பில் வந்தபோது, அவ்வாண்டு ஜூன் 1 தேதி வரை, சொத்து வாடிக்கையாளர்களை நேரில் சந்திக்கக்கூடாது என்றும் அதனால் வீடுகளை நேரடி யாக பார்வையிடுவதைத் தள்ளிவைக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அத்தருணத்தில் தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்கும் சொத்து முகவர்களுக்கும் கைகொடுத்தது.
ஸூம் வழி சந்திப்புகள்
அப்போது பெரும்பாலான துறைகள் ஸூம் மெய்நிகர் தளத்தை கொண்டு சந்திப்புகளை வழிநடத்திய வேளையில், அதனைப் பயன்படுத்த திருமதி இந்திராணி கற்றுக்கொண்டார்.
அதனை எப்படிப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்ளும் அதே சமயத்தில் அதனை வாடிக்கையாளர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது.
அதோடு கைபேசியால் வீட்டைக் காணொளி வழி நேரடியாக படம்பிடிக்கும் உத்திகளையும் திருமதி இந்திராணி வீட்டை விற்க விரும்பு வோருக்குச் சொல்லிகொடுத்தார்.
இந்த மெய்நிகர் ஸூம் சந்திப்பு களில் வீட்டை விற்பவரும் வீட்டை வாங்க விரும்புவரும் சொத்து முகவருடன் இணைவர்.
சொத்து வாங்குவது விற்பது தொடர்பிலான பணக் கணக்கு களையும் வீட்டுப் பரிவர்த்தனை செயல்முறைகளையும் மெய்நிகர் சந்திப்புகளில் விளக்க முடிகிறது.
தனியார் கூட்டுரிமை வீடுகள் விற்பனைக்கு அறிமுகமாகும்போது மெய்நிகர் வீட்டுக் காணொளிகளை மட்டும் பார்வையிட்டு நேரடியாகச் சென்று பார்க்காமலேயே வீடு வாங்கியவர்களும் உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து சொத்து முகவராக பணியாற்றும் மற்றொருவரான சிங்கப்பூர் ரியல்டர்ஸ் இன்காப்பரேஷன் நிறுவன இணைப் பிரிவு இயக்குநர் திரு தங்கமணி கணேசன், 34, கொவிட்-19 சமயத்தில் பெரும்பாலும் வீடு வாங்க விரும்புவோரிடம் முப்பரிமாண வடிவிலான வீட்டுக் காணொளிகளைக் காட்டியதாக சொன்னார்.
விளம்பரக் காணொளி உத்தி
கிருமித்தொற்று சமயத்தில் அதிக அளவில் வீட்டு விற்பனை விளம்பரக் காணொளிப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டன. திருமதி இந்திராணி இந்த உத்தி முறையை சில ஆண்டு களுக்கு முன்னரே தொடங்கிவிட்டார்.
சராசரியாக இரண்டு நிமிடங்கள் நீடிக்கும் காணொளிகளில், வீட்டின் அக்கம்பக்க வசதிகளைப் பற்றி பேசுவதுடன் விற்பனை ஆகும் வீட்டை சுற்றிக்காட்டி அதன் தனித்துவ அம்சங்களைப் பற்றியும் அவர் விளக்குவார்.
இது ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் போன்ற தளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
"ஊடகத் துறையில் வேலை அனுபவம் இருந்ததால், மின்னிலக்கக் காணொளியில் நேரடியாக முன்னால் நின்று பேசுவது இயல்பாக வந்தது. பாரம்பரிய விளம்பரங்களைக் காட்டிலும் இன்னும் அதிகமானோரை இது சென்றடைகிறது," என்று கூறினார் திருமதி இந்திராணி.
நேரடிச் சந்திப்புக்கு முன், முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் இக்காணொளியை பார்த்துவிடுவதால், தம்மை பற்றிய ஓர் அபிப்பிராயம் உருவாகி வாடிக்கையாளர்களுடன் வெளிப்படையாக கலந்துபேசுவது சுலபமானதாக அவர் விளக்கினார்.
சொத்து முகவரான திரு கணேசனும் அதே நிறுவனத்தில் பணியாற்றும் அவரது மனைவி திருமதி செ.மஹாலட்சுமியும் இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து இணைந்து வீடு விற்பனை விளம்பரக் காணொளிகளில் இடம்பெற்று வருகின்றனர்.
வீட்டின் சுற்றுப்புறத்தை நன்கு ஆராய்ந்து, வீட்டிலுள்ள தனித்துவ சிறப்புகளையும் வெளிக்காட்டுவதில் இருவரின் பங்கும் உள்ளது.
"குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பிறர் வீட்டிற்கு செல்ல முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தபோது, இந்த விளம்பரக் காணொளிகள் பெரிதும் உதவின. வாடிக்கையாளர்களிடமிருந்தும் அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது," என்று கூறினார் இணை மூத்த விற்பனை நிர்வாகியான திருமதி செ.மஹாலட்சுமி, 33.
இருவர் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிப்படுவர் என்ற கட்டுப்பாடு இருந்தபோது வீட்டை நேரடியாக வந்து பார்க்க அனுமதி கொடுப்பதற்கு அதனை விற்பவர்கள் அஞ்சினர். அத்தருணம் திரு கணேசன் விற்கப்படும் வீட்டிற்கு தனியாகச் சென்று, தம் கைபேசி வழி அங்கு காணொளி எடுத்து, வீடு வாங்கு பவரிடம் அந்தக் காணொளியை அனுப்பி, வெற்றிகரமாக விற்பனையையும் முடித்தார்.
சமூக வலைத்தளங்களில் விளம்பரக் காணொளிகளைப் பார்த்த பிறகு அவ்வீட்டை வாங்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான் தங்களைப் பெரும்பாலும் தொடர்பு கொண்டனர் என்றும் இதனால் வாடிக்கையாளர்கள் பிடிக்காத வீட்டை நேரடியாக பார்க்கும் சாத்தியமும் குறைகின்றது என்றும் திரு கணேசன் தெரிவித்தார்.
புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த விளம்பரக் காணொளி கள் உதவுகின்றன என்று கூறும் இந்த ஜோடி, இவற்றை டிக்-டாக்கிலும் லிங்ட்டின் தளத்திலும் புதுவித காணொளிகளாக அறிமுகப் படுத்த ஆயத்தமாகி வருகின்றனர்.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு பிறகும் இந்த மின்னிலக்க காணொளி மோகம் தொடரும் என்று நம்பும் இந்த மூன்று சொத்து முகவர்களும் சொத்து ஆலோசனை வழங்கும் காணொளிகளையும் எதிர்காலத்தில் தயாரிக்க எண்ணம் கொண்டுள்ளனர்.