ஆர்த்தி சிவராஜன்
பள்ளிக் காலத்திலிருந்து 30 ஆண்டுகளாக தொடரும் நட்பை மேலும் வலுப்படுத்த நிஸாம் ஏ ஹாஜா, ரமணன் ரகுராமன் சுதாகர் மஹாலிங்கம் மூவருக்கும் சைக்கிளோட்டம் கைகொடுக்கிறது. 41 வயதாகும் இந்த மூன்று நண்பர்களும் தொடர்ந்து வளர்ந்த இந்த நட்பை பலப்படுத்த சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டனர்.
நண்பர்களிடையே தொடங்கிய சைக்கிளோட்டம் அவர்களது குடும்பத்தினரையும் ஈர்த்தது. மெல்ல மெல்ல தேசிய நிகழ்வுகளிலும் பங்கேற்கும் ஆர்வத்தை அவர்களிடம் வளர்த்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஓசிபிசி சைக்கிள் மெய்நிகர் சவாரி 2021ல் (OCBC Cycle Virtual Ride) மூன்று நண்பர்களும் தங்கள் குடும்பங்களுடன் கலந்துக்கொண்டனர்.
இரண்டாவது ஆண்டாக நடைபெறும் இந்த மெய்நிகர் நிகழ்வில் 6,100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
நிலப் போக்குவரத்து ஆணையத்தில் மேலாளராகப் பணிபுரியும் திரு நிஸாம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓசிபிசி சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு மெய்நிகர் நிகழ்வில் தமது நண்பர்களுடன் 23 கிலோ மீட்டர் பிரிவில் பங்கேற்ற இவர், இந்த ஆண்டு 200 கிலோ மீட்டர் பிரிவில் கலந்துகொண்டார்.
தந்தையின் சைக்கிளோட்ட முயற்சிகளால் ஈர்க்கப்பட்ட நிஜாமின் பிள்ளைகளான 10 வயது பெரோஸ் ஸிடேன், மூன்று வயது பியோனா ஸியா இருவரும் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். 23 கிலோ மீட்டர், ஐந்து கிலோ மீட்டர் பிரிவுகளில் அவர்கள் பங்கேற்றனர்.
மூத்த கட்டடக் கலைஞராக பணிபுரியும் நிஸாமின் மனைவி திருமதி தீனுல் பிர்தவுஸ், 35, தமது மகளுடன் சேர்ந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தை நிறைவு செய்தார்.
குடும்பத்தினரை தேசிய சைக்கிளோட்ட நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்திய நிஸாம், தமது நண்பர்களின் குடும்பங்களையும் இதில் ஈடுபடத் தூண்டினார்.
சென்ற ஆண்டு நடைபெற்ற ஓசிபிசி சைக்கிள் மெய்நிகர் சவாரி யில் முதல்முறையாக தமது குழந்தைகளாகிய மூன்று வயது ரக்ஷத் ரமணன், ஆறு வயது ரஷனா ரமணன் ஆகியோருடன் கலந்துகொண்டார் திரு ஆர்.ரமணன்.
இந்த ஆண்டு நிகழ்வில் 200 கிலோ மீட்டர் பிரிவில் திரு ரமணனும் 23 கிலோமீட்டர் பிரிவில் ரஷனாவும் ஐந்து கிலோமீட்டர் பிரிவில் ரக்ஷத்தும் கலந்துகொண்டனர்.
100 கிலோமீட்டர் பிரிவில் ரமணனின் தந்தை திரு எஸ். ரகுராமன், 68, பங்கேற்றார்.
"ஒருவருக்கொருவர் தொடர்பில் இருப்பதற்கும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் நாங்கள் சைக்கிளோட்டத்தைத் தேர்வு செய்தோம். எங்கள் குடும்பத்தாரும் இந்த விளையாட்டில் கலந்துகொள்ளும்போது எங்களிடையே நல்ல நெருக்கம் ஏற்படுகிறது," என்று கூறினார் திரு ரமணன்.
திரு சுதாகர் கடந்த ஆண்டு மெய்நிகர் நிகழ்வில் முதல் முறையாக 23 கிலோமீட்டர் பிரிவில் கலந்துகொண்டார். இவர், இந்த ஆண்டு தமது ஏழு வயது மகன் வெற்றிவேலுடன் பங்கேற்றார்.
தந்தை 200 கிலோமீட்டர் பிரிவிலும், மகன் ஐந்து கிலோமீட்டர், பிரிவிலும் கலந்துகொண்டனர்.
"சென்ற ஆண்டிலிருந்துதான் நான் தொடர்ந்து சைக்கிளோட்டத்தில் ஈடுபட்டேன். நண்பர்கள் நிஸாம், ரமணன் இருவருடனும் சேர்ந்து வாரந்தோறும் சைக்கிள் ஓட்டுவதால், எங்கள் உடல்நலம் மேம்பட்டது. பள்ளியில் இருந்த அதே நட்பு இப்போதும் தொடர்ந்து வளர்கிறது," என்றார் திரு சுதாகர்.
மூன்று குடும்பங்களும் சைக்கிள் ஓட்டும் தூரத்தை தொடர்ந்து அதிகரிக்க முயற்சி செய்து வருகின்றன.
"சிங்கப்பூர் தீவு முழுவதும் சைக்கிள் ஓட்ட திட்டமிட்டுள்ளோம். சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தை ஒரே தடவையில் பயணம் செய்ய பயிற்சி செய்து வருகிறோம்" என்று தங்கள் எதிர்காலத் திட்டம் குறித்து நிஸாம் கூறினார்.
தங்கள் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை என மூவரும் கூறினர். அவர்களின் பிறந்தநாள்களுக்காக அவர்களின் மனைவிமார் ஒவ்வொருவருக்கும் ஒரு சைக்கிளை வாங்கியதாகவும் கூறினர். சைக்கிள் ஓட்டும் ஆர்வத்தின் மூலம் இவர் களின் நட்பும் குடும்பப் பிணைப்பும் சிறப்பாக மலர்ந்துள்ளதை நண்பர்கள் குறிப்பிட்டனர்.