ஹோட்டல் துறையில் ஐந்தாண்டு களாகப் பணியாற்றி வரும் 28 வயது குமாரி ஃப்ரிடா எங், வேலையில் கொண்டிருக்கும் பேரார்வம் விருதுகளை அவர் வசம் இழுக்கிறது.
இவ்வாண்டின் பிரசித்திப்பெற்ற சிங்கப்பூர் பயணத்துறைக் கழக விருதுக்கு முன்மொழியப்பட்ட 77 பேரில் இவரும் ஒருவர். ஹோட்டல் களுக்கான பிரிவில் உன்னத வாடிக்கையாளர் சேவை விருதை இவர் வென்றுள்ளார்.
கொவிட்-19 கிருமித்தொற்றை எதிர்த்து போராடி மீள்திறனுடனும் கடப்பாட்டுடனும் செயல்படும் பங்காளிகளையும் வர்த்தகங்களையும் அங்கீகரிப்பது இந்த விருதின் நோக்கமாகும்.
ஹோட்டல் பிரிவில் உன்னத வாடிக்கையாளர் சேவை வழங்கியற்காக குமாரி எங் பணியாற்றும் குவின்சி ஹோட்டல் இவரை விருதுக்கு நியமித்தது.
கடந்தாண்டு கிருமிப் பரவலின் போது சிங்கப்பூருக்கு வரும் பயணி களை சில வாரங்களுக்கு தனிமைப்படுத்தும் வளாகங்களாக பல உள்ளூர் ஹோட்டல்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் ஒன்று குவின்சி ஹோட்டல். கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து குமாரி ஃப்ரிடா விருந்தினர் சேவை அதிகாரியாக அங்கு பணியாற்றி வருகிறார்.
முன்னிலை வரவேற்புப் பொறுப்பு களுக்கு அப்பால், ஹோட்டலில் தங்கிய அனுபவம் குறித்து விருந்தினர்கள் பகிரும் கருத்துகளையும் அவர் கேட்பார்.
ஒருமுறை, குவின்சி ஹோட்டலில் தங்கி இருந்த வெளிநாட்டு ஊழியர் தமது அறையின் தொலைபேசிவழி வரவேற்புப் பிரிவில் பணியாற்றும் ஃப்ரிடாவைத் தொடர்பு கொண்டார்.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார் அந்த ஊழியர். வேலையை இழந்துவிடுவோமா, கொவிட்-19 பரிசோதனை முடிவு சாதகமாக இல்லாத பட்சத்தில் என்ன செய்வது என்ற மனக் குழப்பம் அவருக்கு. கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால் அவரால் அறையிலிருந்து வெளிவர முடியாததால் அழுத்தம் மேலும் அதிகமானது.
அவரது கவலைகளைக் கேட்டு அறிந்த ஃப்ரிடா, பக்குவமாகப் பேசி அவரைத் தேற்றினார்.
ஊழியரின் கிருமிப்பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள உதவியதோடு அவர் தனிமைப்படுத்தப்படும் நேரத்தில் அவருக்கு உதவத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார்.
ஒவ்வொரு நாளும் அந்த வெளிநாட்டு ஊழியரைத் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் ஃப்ரிடா. மேலும் அவருக்குச் சற்று உற்சாகம் தர, முறுக்கு பொட்டலத்தை வாங்கி அவரது அறைக்கு அனுப்பினார்.
சுமார் ஒரு மாதம் அங்கு தங்கியிருந்த வெளிநாட்டு ஊழியருக்கு தொற்றுப் பரிசோதனை முடிவு நற்செய்தியாக வந்தது. அவர் வேலைக்கும் திரும்பினார்.
"தனிமைப்படுத்தப்படும் நேரத்தில் யாரிடமாவது பேச முடிந்ததில் அவருக்கு ஆறுதல். அவரது நலனில் நாம் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்த முடிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நாட்டிற்குப் பங்களிக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றிகூற கடமைப்பட்டிருக்கிறோம்," என்று தெரிவித்தார் குமாரி ஃப்ரிடா.
இதற்கு முன்னர் சிங்கப்பூரின் சிறந்த வரவேற்பாளர் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார் ஃப்ரிடா,
- செய்தி: ப. பாலசுப்பிரமணியம்