எஸ்.வெங்கடேஷ்வரன்
சுத்திகரிப்பு என்பது ஒரு கடினமான தொழில். சமூகத்திற்கு ஆற்றும் சேவை என்றுகூட சொல்லலாம்.
அதிலும் கொவிட்-19 கிருமித்தொற்று நிலவும் சூழலில் சுத்திகரிப்புக்கான தேவை, பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இத்தகைய சுத்திகரிப்புத் துறையில் உற்பத்தித்திறன் மிகுந்த இயந்திரங்கள் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகித்து வருகிறார் முனைவர் மோகன் ராஜேஷ் இலரா, 39.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்படும் இயந்திரங்கள் குறித்துக் கடந்த 16 ஆண்டுகளாக இயந்திரவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இவர், தற்போது சிங்கப்பூர் தொழில்நுட்ப வடிவமைப்புக் பல்கலைக்கழகத்தில் (எஸ்யுடிடி) பொறியியல் பொருள் மேம்பாட்டுத் துறை உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார்.
கிட்டத்தட்ட 30 விதமான சுத்திகரிப்பு இயந்திரங்களில் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் 50 ஆய்வாளர்கள் கொண்ட குழுவை வழிநடத்தி வருகிறார் திரு ராஜேஷ்.
உருவத்தை மாற்றக்கூடிய எந்திரவியல் ஆராய்ச்சியில் 'எஸ்யுடிடி' பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்த ஆராய்ச்சிக் குழு, உலகின் முதல் நிலையில் இருப்பதாகக் கூறினார் முனைவர் ராஜேஷ்.
"2011ஆம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகச் சேர்ந்து, எந்திரவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டபோது எந்தத் துறைக்கு இந்த இயந்திரங்களின் பயன்பாடு அவசியமாக இருக்கும் என்று சிந்தித்தோம். பராமரிப்பு, சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் மனிதவளம் குறைவாகவும் வேலை கடினமாகவும் இருக்கும் என்பதை அறிந்தோம். அதில் நம் இயந்திரங்கள் பெருமளவில் உதவும். சுத்தத்திற்கு சிங்கப்பூர் அறியப்படுவதால் இங்கு தயாரிக்கப்படும் சுத்திகரிப்பு இயந்திரங்களுக்கு அதிக மதிப்பு இருக்கும்," என்றார் திரு ராஜேஷ்.
தேசிய எந்திரவியல் திட்டத்தின்கீழ் அடிப்படை எந்திரவியல் ஆராய்ச்சியை மேற்கொள்ள முடிந்தது என்றும் உலகின் மற்ற பல நாடுகளை ஒப்பிடும்போது சிங்கப்பூர் அரசாங்கம் எந்தரவியல் ஆராய்ச்சிக்கு வெகுவாக ஆதரவளித்துள்ளது என்றும் குறிப்பிட்டார் அவர்.
"எந்திரவியல் துறை ஆராய்ச்சிக்குப் பங்களித்துவரும் நாடுகளில் சிங்கப்பூர் உயர்ந்த நிலையில் உள்ளது. உலகத்தரத்தில் போட்டித்தன்மைமிக்க ஆய்வாளர்கள், பொறியாளர்களை நாம் உருவாக்குவதால் அந்த நிலையை எட்டியுள்ளோம். அனைத்துலக அளவில் நம் தொழில்நுட்ப உருவாக்கங்களை உற்பத்தி செய்ய முடிவதும் அதற்கு ஒரு முக்கியக் காரணம்," என்றார் ராஜேஷ்.
சுத்திகரிப்பு இயந்திரங்களைத் தயாரிக்கும் 'லயன்ஸ்போட் இன்டர்நேஷனல்' (Lionsbot International) உட்பட கப்பல், கடல்சார், பூச்சிக் கட்டுப்பாட்டுக்கான இயந்திரங்களைத் தயாரிக்கும் 'ஓஷியானியா ரோபோடிக்ஸ்' (Oceania Robotics) என்ற இரு நிறுவனங்களுக்கும் துணை நிறுவனர் திரு ராஜேஷ்.
"எந்திரவியல் சார்ந்த நிறுவனங்கள் பல இல்லாததால் நிறைய இளம் எந்திரவியல் ஆய்வாளர்கள் சிறிது காலம் கழித்து மற்ற துறைகளுக்கு மாறிவிடுகிறார்கள். அவர்களை இத்துறைக்கு ஈர்த்து தக்கவைத்துக்கொள்ள இந்த நிறுவனங்களை அமைத்தேன்," என்றார் திரு ராஜேஷ்.
ஜூவல் சாங்கி, சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம், ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்கள், அலுவலக வளாகங்கள், கொவிட்-19 தொடர்பான தனிமைப்படுத்தும் வளாகங்கள் என்று பல இடங்களில் ராஜேஷ் ஆராய்ச்சியில் உருவான இயந்திரங்கள் செயல்பட்டு வருகின்றன.
உள்ளூர் மட்டுமில்லாமல் உலகில் ஏறக்குறைய 20 நாடுகளுக்கு இந்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
"கிருமித்தொற்று காரணத்தால் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. முன்பெல்லாம் ஒரு நாளுக்கு ஒரு தடவை மட்டுமே சுத்தம் செய்ய வேண்டிய இடத்தை, இப்போது பல முறை சுத்தம் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் மனிதவள பற்றாக்குறைகளைப் பூர்த்தி செய்ய இயந்திரங்கள் கைகொடுக்கின்றன. கொரோனா நோயாளிகளுக்கான இடங்களைச் சுத்திகரிக்க இயந்திரங்களைப் பயன்படுத்துவது பாதுகாப்பானதாகவும் அமைகின்றன," என்றார் ராஜேஷ்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனிதர்களிடமிருந்து வேலைவாய்ப்புகளைக் பறித்துவிடுமோ என்று சமூகத்தில் நிலவும் அச்சம் குறித்துக் கருத்தளித்தார் ராஜேஷ்.
"கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களிலும் அமைப்புகளிலும் இப்போது கணினி மற்றும் இணையப் பயன்பாட்டைக் காணலாம். தொழில்நுட்பம் மனித வாழ்க்கைக்கு ஆக்ககரமாகப் பங்காற்றி வருகிறது.
"அதுபோலவே செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியும் எதிர்காலத்தில் சமுதாயத்தின் வளர்ச்சிக்குப் பயன்படும். உதாரணத்திற்கு, சுத்திகரிப்பு துறைப் பணியாளர்கள் துப்பரவு வேலை செய்வதற்குப் பதிலாக இயந்திரங்களை நிர்வகிப்பதில் கவனம் செலுத்தலாம். வேலைப் பளு குறையும். வேலைகளின் தன்மைகள் மாறுமே தவிர வேலைவாய்ப்புகள் அழியாது," என்றார் முனைவர் ராஜேஷ்.